முகப்பு
தற்போதைய செய்திகள்

மே.4-க்கு பிறகு திராவிட மாடல் 2.0 தொடர்ந்து செயல்படும்: அன்பில் மகேஷ் பேட்டி

மே.4 தேர்தல் முடிவு வரும்போது திராவிடம் மாடல் 2.0 தொடர்ந்து வளர்ச்சி நோக்கி செல்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது ...

Updated On : 30 மார்ச், 2026 at 9:33 AM
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் - டிஎன்எஸ்
பகிர்:

மே.4 ஆம் தேதி தேர்தல் முடிவு வரும்போது திராவிடம் மாடல் 2.0 தொடர்ந்து வளர்ச்சி நோக்கி செல்வோம். எங்களைப் பொறுத்தவரை முப்பது நாள்கள் என்பது சின்ன இடைவேளை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு சட்டபேரவைத் தொகுதிக்கு இனிக்கோ இருதரராஜ் மற்றும் மணப்பாறை தொகுதிக்கு அப்துல் சமது ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்வர் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரோ, அதேபோல் எனது தொகுதி மக்கள் மீது உள்ள அதிக நம்பிக்கையில் எனக்கு மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.

மக்களிடம் செல்லும்போது நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகள் சொல்லி வாக்கு கேட்க உள்ளோம். எங்களுடைய பலம் என்பது தோழமைக் கட்சியினுடையது. எனவே எங்களது தோழமைக் கட்சியான காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளை கௌரவப்படுத்தி வருகிறோம். மிகப்பெரிய உற்சாகத்தை வழங்கி உள்ளனர்.

விஜய் திருச்சியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீங்கள் தமிழ்நாட்டின் குடிமகனாக இருந்தால். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார்.

நமது முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை தெளிவாக கூறிவிட்டார் எங்களது போட்டி தமிழ்நாடு அணியா, தில்லி அணியா என்பதுதான்.

நமது மாநிலத்திற்கு எதிராக செயல்படக்கூடிய அணியை வீழ்த்துவது தான் எங்களது ஒரே லட்சியம்.

பெருமையான விஷயம் திராவிட மாடல்தான். மக்களுடைய ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு முக்கியமானது என்பதை சொல்கிறேன். அவர்கள் ஓட்டுப் போட்டு எங்களை தேர்ந்தெடுத்ததால் தான் இத்தனை ஆண்டு யாரும் சிந்திக்காத திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் விதமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தோம். இது வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது அதை விரிவுபடுத்தி திட்டமாக எட்டாம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தை 15 லட்சம் பிள்ளைகள் பயன் பெறுகின்றனர். கல்வி அறிவை முறையாக கொடுத்தாலே போதும் அதன் பிறகு அந்த பிள்ளைகள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு பிள்ளைக்கு தானாக வரும்.

திருவரம்பூர் தொகுதி என்பது எப்படி வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாறியுள்ளது என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று. அதற்கு சம்பந்தமாக மாற்று வழி ஒன்றை தர வேண்டும். அதற்காக அரை வட்டச் சாலை என்பதை முழு வட்டச் சாலையாக கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளேன். தொகுதி சார்ந்த திட்டங்களும் கண்டிப்பாக வரும். எங்களைப் பொறுத்தவரை வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதுசார்ந்த கட்டமைப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது எங்களது கடமை.

எனவே கோரிக்கை பத்து என்றால் பத்தையும் செய்து விட்டோம் என்று சொல்லவில்லை, ஏழு கோரிக்கைகளை செய்துள்ளோம். மீதி மூன்றை எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

எங்களைப் பொறுத்தவரை முப்பது நாள்கள் என்பது சின்ன இடைவேளை தான். மே. 4 தேர்தல் முடிவு வரும்போது திராவிடம் மாடல் 2.0 தொடர்ந்து வளர்ச்சி நோக்கி செல்வோம் என அன்பில் மகேஷ் கூறினார்.

summary

'Dravidian Model 2.0' Will Continue to Function After May 4th says Minister Anbil Mahesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.