எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக செந்தில்பாலாஜி போட்டியிடாதது ஏன்? - தவெக கேள்வி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக தொண்டாமுத்தூரில் போட்டியிடாதது ஏன்? தவெக கேள்வி குறித்து...
கோவை: அண்ணாமலை கோவையில் போட்டியிடும்போது உள்ளூரில் விலை போகாத மாடு என கூறிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக தொண்டாமுத்தூரில் போட்டியிடாதது ஏன்? என தவெக சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் சுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த தவெக சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமாருக்கு அவரது ஆதரவாளர்கள் விசில் மாலை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சூலூர் தொகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருக்கும் குளத்தையும், நொய்யல் ஆற்றையும் தூர்வாரி சீரமைப்பேன். உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்று கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன். தற்போது சூலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லாததால் தவெகவில் இணைந்தேன். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு கீழ் பணியாற்றுபவர்களுக்கும், அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கும் மட்டுமே பதவிகளை வழங்குவதாகவும், வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என அவர் நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், கோவையில் அண்ணாமலை போட்டியிட்டபோது உள்ளூரில் விலை போகாத மாடு என விமர்சித்த செந்தில்பாலாஜி, தற்போது உள்ளூரில் விலை போகாததால் கோவையில் போட்டியிகிறார். கோவையில் திமுகவை காப்பாற்ற வேண்டும் என செந்தில்பாலாஜி நினைத்திருந்தால் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக போட்டியிட வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய மாட்டார் என்றும் திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கை மூலம் மக்களை விலை கொடுத்து வாங்க பார்க்கிறார்கள் என்று விமர்சித்தார்.
அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள். ஊழல் விஷயத்தில் அவர்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. கடந்த பேரவைத் தேர்தலின்போது அதிமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்வேன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை வரை எடுக்காதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.