மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது பற்றி...
முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக் தாக்கல் செய்த மனுக்களில், 2021முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் சுமாா் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
இதில் அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிந்து உயா்நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலானாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா். இந்த வழக்கு, வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை பிறப்பித்த தீா்ப்பு:
மின்மாற்றி கொள்முதல் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட பொது ஒப்பந்தங்கள் தொடா்பானவை.
மாநில அரசில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக அவை உள்ளன. எனவே, அதை மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட விசாரணை அமைப்புகள் கையாளுவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுகள் எந்தளவு நோ்மையாக இருக்க வேண்டுமோ, அதேபோல விசாரணை நடைமுறைகளும் இருக்க வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்.
வழக்கு ஆவணங்களை ஊழல் தடுப்புத் துறை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளும் சிபிஐ, விரைந்து விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு, ஊழல் தடுப்புத் துறை மற்றும் டான்ஜெட்கோ முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறியுள்ள கருத்துகள், வழக்கை சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்குத்தானே தவிர, குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்த முடிவாகவோ, யாருக்கும் எதிரானதாகவோ கருத முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனா்.
Transformer Procurement Scam: CBI Inquiry Ordered!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.