லைஃப்ஸ்டைல்

வெள்ளைச் சர்க்கரை எனும் வெண்பிசாசு!

சுருக்கமாகச் சொல்வதென்றால் மாட்டுச் சாணம் கூட போதுமான அளவு சர்க்கரை கலந்தால் சுவையானதாகவே இருக்கும். அதற்காகச் சாப்பிட முடியுமா?’

கார்த்திகா வாசுதேவன்

வெள்ளை அரிசி, வெள்ளை உப்பு போலவே வெள்ளைச் சர்க்கரை உடல் நலத்துக்கு கேடு என்ற பிரச்சாரம் நீண்ட நாட்களாய் தொடர்கிறது. கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது 'நாம் தமிழர்' கட்சியின் பிரச்சாரக் கொள்கைகளில் ஒன்றாகவும் கூட  இந்த வெள்ளை சர்க்கரை  விவகாரம் முன்னெடுக்கப்பட்டது. இத்தனை எதிர்ப்புகள் வலுக்கும் அளவுக்கு அதில் என்ன தான் பிரச்சினை என்ற கேள்வி வரலாம். நாளொன்றுக்கு காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு  என்ன என்று கணக்கிட்டுப் பார்த்தால் தீவிரமான எதிர்ப்பிற்கான காரணத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் சராசரியாக தனிநபர் ஒருவர் வருடம் முழுமைக்கும் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவு 20.2 கி.கிராம். உலக சராசரி சர்க்கரை உட்கொள்ளும் அளவான 24.8 கி.கிராமை  விட இது சற்றுக் குறைவு தான் ஆனால் இந்த நிலை இப்படியே நீடிக்கவில்லை அல்லது குறையவில்லை என்பது தான் கவலைக்கிடமான விஷயம். அடுத்த ஐம்பதாண்டுகளில் இந்தியாவின் சர்க்கரை உட்கொள்ளும் அளவானது உலக சராசரி அளவைக் காட்டிலும் 5 முதல் 13 சதவிகிதம் வரை வெகு வேகமாக அதிகரித்து வருவதாக 2012 ஆம் ஆண்டில் பிஜித் தீவில் நடைபெற்ற உலக சர்க்கரை மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

காலை எழுந்ததும்  முதல் வேலையாக காபியோ, டீயோ, அல்லது ஹெல்த் டிரிங்க்ஸ் என்ற பெயரில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன் விட்டா இத்யாதிகள்... இவற்றில் ஏதாவது ஒன்றை விழுங்குகிறோம். அருந்துகிறோம் என்று சொல்ல முடியவில்லை ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் காலை நேர அவசரத்தில் இவற்றை விழுங்கத்தான் முடிகிறது. சிலர் உடல் நலனில் பெருத்த அக்கறை கொண்டவர்களாக கிரீன் டீ அருந்துகிறோம் என்பார்கள், அவர்களில் பத்தில் ஒருவர் வெள்ளைச் சர்க்கரை கலந்து அருந்துபவராகவே இருக்கிறார். கிரீன் டீ க்கு வெள்ளைச் சர்க்கரை சேர்க்க கூடாது என்பது அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும், ஆனாலும் பெரும்பாலோனோருக்கு இனிப்பை சுவைத்த நாவின் எதிர்பார்ப்பை அத்தனை எளிதில் அடக்க முடிவதில்லை என்பதே நிஜம். இப்படி அருந்தினால் கிரீன் டீயினால் என்ன பலன்?

வெள்ளைச் சர்க்கரையால் என்ன கெடுதல்?

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையையே வெள்ளைச் சர்க்கரை என்கிறார்கள். இந்த சர்க்கரை நேரடியாக வெற்றுக் கலோரிகளாக ரத்தத்தில் கலக்கிறது. இதனால் ஆற்றல் கிடைக்கும் ஆனால் சத்து மிக்க மினரல்களோ விட்டமின்களோ வேறு மூலக்கூறுகளோ எதுவும் இவற்றில் இருப்பதில்லை. அதாவது வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊட்டச் சத்து எதுவும் இதில் இருப்பதில்லை. சுத்திகரிப்பில் அவை அனைத்தும் நீக்கப் பட்டு விடுகின்றன.

மேலும் சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை குறித்துப் பேசும்போதெல்லாம் டாக்டர்கள் சொல்வது, ’மனித நாக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, எனும் ஐவகை சுவைகளை உணரக் கூடிய வகையில் நாவின் நுனியிலும் அடிப்பகுதியிலும் சுவை மொட்டுக்களைக் கொண்டது. ஆனால் சர்க்கரை தரும் இனிப்புச் சுவை மற்ற நான்கு சுவைகளையும் மழுங்கச் செய்து விடும். எனவே நாளடைவில் பிற சுவைகளை விட இனிப்புக்கே மனம் ஏங்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் மாட்டுச் சாணம் கூட போதுமான அளவு சர்க்கரை கலந்தால் சுவையானதாகவே இருக்கும். அதற்காக சாப்பிட முடியுமா?’ என்கிறார்கள். இப்படிச் சொல்லும் மருத்துவர்களே வெள்ளைச் சர்க்கரையைப் முற்றிலும் புறக்கணித்து விட்டார்களா என்றால் அப்படியும் உறுதியாகக் கூறிவிட முடியாது.

ஏன் இனிப்புச் சுவை விரும்பப் படுகிறது?

உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள், இந்த பூமியில் பிறந்து தாய் மாடி தொட்ட மறுகணமே தாய்ப்பால் மூலமாக முதலில்  நாம் சுவைப்பது இனிப்புச் சுவையைத் தான். அப்போதிருந்து  இனிப்பிற்கான தாகம்தொடங்கி விடுகிறது . மேலும் சர்வ தேச அளவில் நாளொன்றுக்கு பெண்கள் 6 டீஸ்பூன் வீதமும் ஆண்கள் 9 டீஸ்பூன் வீதமும் சுவைக்காக உணவில் அல்லது பானங்களில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் சர்வசாதாரணமாக நாம் இந்த எல்லைகளை கடந்து விடுகிறோம். ஏனெனில் ஒரு கிரீம் பிஸ்கட் சாப்பிட்டால் 5 டீஸ்பூன் சர்க்கரை ரத்தத்தில் கலந்து விடுகிறது, பாக்கெட் செய்யப்பட்ட பழ ரசங்களை அருந்தினால் போதும் 4 டீஸ்பூன் சர்க்கரை ரத்தத்தில் நேரடியாகக் கலந்து விடுகிறது.டாக்டர்கள் இது நிச்சயம் ஒரு நாள் ஆபத்தான விளைவையே ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.

வெள்ளைச் சர்க்கரை போதையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

வேறு வழியே இல்லை நாளொன்றுக்கு 1 டீ ஸ்பூன், 2 டீஸ்பூன் என்று சிறிது சிறிதாகத் தான் குறைக்க வேண்டும். ஆண்களோ பெண்களோ எவராயினும்குறைந்த பட்சம் தினமும் 5 டீஸ்பூன் சர்க்கரை அளவைத் தாண்டி பயன்படுத்தக் கூடாது எனும் சுயகட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் பிறகு ஒபிசிட்டி, டயாபடீஸ் என்று அவஸ்தைப் படப்போவது நாம் தான். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நமது ரத்தத்தோடு கலந்து விட்ட வெள்ளைச் சர்க்கரையை அத்தனை சீக்கிரம் நம்மால் உதாசீனப்படுத்த முடியவில்லை. ஆனால்  எப்போதிருந்து வெள்ளைச் சர்க்கரை மோகம் தீவிரமாக மக்களை பிடித்து ஆட்டியது என்று ஆராய்ந்தால் அது இந்தியாவில் காப்பி புழக்கத்துக்கு வந்த காலத்தில் போய்  நிற்கும், காப்பிக்குப் பிறகு தான் டீ வந்தது. இரண்டுக்கும் சர்க்கரை தான் பிரதானம். பால் இல்லாமல் கூட காப்பியோ ,டீயோ அருந்துவோர் உண்டு ஆனால் சர்க்கரை இல்லாமல் முடியாது. இப்போது சில ஆண்டுகளாக 'உணவே மருந்து' என்றும் ’ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம்’ என்றும் புதிதாக ஒரு அலையடித்துக் கொண்டிருக்கிறது. இந்த அலை வெள்ளைச் சர்க்கரை மோகத்தை அடித்துக் கொண்டு போகுமா என்று பார்க்க நீண்ட காத்திருப்பு அவசியம்.

வெள்ளைச் சர்க்கரைக்கு முன்?

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு தோராயமாக 1800 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை பழுப்புச் சர்க்கரை தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்திருக்கிறது இந்த பழுப்புச் சர்க்கரையை இப்போதைய வெள்ளைச் சர்க்கரை போல அப்போது நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்க முடியவில்லை எனும் குறை இருந்தது. மேலும் வணிக ரீதியாக பழுப்புச் சர்க்கரையை விட சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரையின் பயனை கேக் மற்றும் சாக்லேட் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பினர். சீக்கிரம் கெட்டு விடும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையோடு ஒப்பிடும் போது விலையும் அதிகம் போன்ற பழுப்புச் சர்க்கரை மீதான சிறு சிறு குறைகளை பெரிதாகப் பட்டியலிட்டு அதை பற்றிய மோசமான கண்ணோட்டத்தை விளம்பரங்கள் மக்கள் மனதில் வலிந்து உருவாக்கினார். சேமித்து வைக்கப் படும் பழுப்புச் சர்க்கரையில் புழுக்கள்,பூச்சிகள் உருவாகின்றன என்று குற்றம் சாட்டப் பட்டது. ஒரு வழியாக 1900 அம் ஆண்டு முதல் பழுப்புச் சர்க்கரையை பின்னுக்குத் தள்ளி சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்று என்ன?

சுத்திகரிக்கப்பட்ட அல்லது வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக நம்மிடையே  தேன், கரும்பு வெல்லம், பனை வெல்லம், தென்னங் கருப்பட்டி, பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு, பழுப்புச் சர்க்கரை என்று பல பொருட்கள் இருக்கின்றன. இவற்றை உணவோடு சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது இவை நேரடியாக ரத்தத்தில் கலந்து ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. இப்படி வரவேற்கத் தக்க காரணம் இருந்தும்   இவற்றின் சுவை வெள்ளைச் சர்க்கரை தரும் சுவையை விட சற்றே மாறுபட்டது என்பதால் சிலருக்கு இவற்றைப் பயன்படுத்தப்  பிடிப்பதில்லை . எதற்கும் முயற்சியும் பழக்கமும் தான் முதல் படி. உடல்நலனை முன்னிட்டு மனக்கட்டுப்பாடோடு இவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினால் நாளடைவில் உடலும் மனமும் பழகி விடும். பிறகு இனி வரும் ஆண்டுகளில்  வெள்ளைச் சர்க்கரை நமக்குத் பிடிக்காமல் போனாலும் ஆச்சர்யமில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT