ரோஜா மலரில் நல்ல மணத்தை மட்டுமல்ல, இனி மின்சாரத்தையும் அடக்கி வைக்க முடியும். ஆம். ஸ்வீடனில் உள்ள லிங்கோபிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்பில் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் வருங்காலங்களில் செடிகளில் இருந்து மின்சாரம் சேகரிக்க முடியும் என்பதையும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்தப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மக்னஸ் பெர்கிரீன் கூறுகையில், "செடிகளின் இலைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அறிவித்திருந்தோம். தற்போது அதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளோம்.
இதற்காக ரோஜா செடியின் தண்டைத் துண்டித்து, அதில் பாலிமர் திரவத்தைச் செலுத்தினோம். அது செடியின் இலைகள், தண்டுப்பகுதி ஆகியவற்றில் வயர்களைப்போல் பரவிச் சென்று தங்கிவிடும்.
பின்னர் தண்டின் கடைசி பகுதியில் எலக்ட்ரோட் எனப்படும் மின்முனைகளைச் செலுத்தினால் போதும், மின்சாரத்தைச் சேமிக்கும் மையமாக ரோஜாச் செடி மாறிவிடும்.
இந்த ரோஜா செடியில் 100க்கும் மேற்பட்ட முறை நாங்கள் மின்சாரத்தைச் சேமித்து சோதித்துப் பார்த்தோம். மின்சார இழப்பின்றி அதில் சேமிக்க முடிந்தது. இந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி பொருள்களையும் இயக்க முடியும்.
அடுத்த கட்டமாக பூமியில் விளையும் செடியிலேயே பாலிமர் திரவத்தைச் செலுத்தி மின்சாரத்தைச் சேமிக்கும் சோதனையைச் செய்து பார்க்க உள்ளோம். இது வெற்றி பெற்றுவிட்டால், செடிகளில் இருந்து மின்சாரத்தை நாம் அறுவடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மக்னஸ் பெர்கிரீன்.
- அ.சர்ஃப்ராஸ்