பாம்பு என்றாலே ஒருவித அச்சம் அனைவருக்கும் ஒரு நொடியேனும் ஏற்படுவது நிஜம்தான். அதனால்தான் நம் மூதாதையர் பாம்பை தெய்வமாகவே வணங்கினர். அண்மையில் ஒரு கோயிலில் நாகத்துக்கு நேரடியாக ஆராதனையும் பூஜையும் நடந்தது நினைவிருக்கலாம். திரைப்படங்களிலும் பாம்பை மையமாக வைத்து காட்சி அமைத்தால், அது பெரிதும் ரசிக்கப்படும். சூப்பர் ஹிட் படமான அண்ணாமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஒரு காட்சி சுவாரஸ்யமானது. நல்ல பாம்பு ஒன்று குஷ்பு தங்கியிருக்கும் லேடீஸ் ஹாஸ்டலில் நுழைந்துவிட, காப்பாற்றச் சொல்லி வார்டன் அவரை உள்ளே பிடித்து தள்ளிவிட, செயலற்று பயத்தில் அமர்ந்திருக்கும் ரஜினி மீது அப்பாம்பு கழுத்தில் ஏறி போஸ் கொடுக்க, அவர் பயத்தில் உளற, எனத் தொடரும் அக்காட்சி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
இப்படி பாம்பை பற்றிய வியப்புக்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு காணொளியில், ஒரு நபர் பாம்பை கையில் பிடித்தபடி விளையாடிக் கொண்டிருந்தார். இதைப் பார்க்கும் போது சற்று திகிலாக இருந்தாலும், கடைசியில் அந்தப் பாம்பு செய்த விஷயம்தான் யாரும் எதிர்பாராதது.
முதலில் இளைஞன் பாம்பை சற்று எட்டப் பிடித்து, அதன் மீது வாயைக் குவித்து ஊதி அதை உசுப்பேற்ற முயற்சிப்பதைக் காணலாம். அவன் இப்படியே வலதும் இடதுமாக அதை அலைக்கழித்து ஊதி விளையாட, அந்தப் பாம்பு, வாயைப் பிளந்து அவனை கொத்த முயற்சித்தபடி இருந்தது. ஆனால் அதன் ஆவேசத்தைப் பொருட்படுத்தாது அவன் தப்பிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவன் அதைத் தன் தலையின் மீது வைக்க, ஒரு விநாடிக்குள் சுதாரித்த பாம்பு, அவன் தலைமுடியைப் பற்றிக் கொண்டது. இதைச் சற்றும் எதிர்பாராத அவன், அதைப் பிடித்து இழுக்க முயற்சிக்க, அதுவும் விடாமல் அவன் முடியை கொத்தாகப் பற்றிக் கொண்டது. விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல இந்தப் போராட்டம் நீடிக்கிறது.
விடியோவின் முடிவில், இளைஞன் எவ்வளவு பலமாக முயற்சி செய்தும், அவன் தலையிலிருந்த பாம்பை அகற்ற முடியவில்லை. திகிலூட்டும் இந்த விடியோ இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர், நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாம்பை தொடர்ந்து எரிச்சலடையச் செய்ததால், அந்த நபர் தாக்குதலுக்கு தகுதியானவர்தான் என்று ஒரு சிலர் நினைத்தனர். இந்த விடியோவின் முடிவு என்னவென்று தெரியாத நிலையில், கீழே கருத்துரை வழங்கிய ஒரு பயனர் இவ்வாறு பதிவிட்டார், 'உனக்கு நல்லா வேணும்., பாம்புகளை மரியாதையுடன் நடத்தக் கற்றுக் கொள்’ என்று எழுதியிருந்தார். இதே போல பலர் அந்த இளைஞனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வினையாகும் என்று பெரியவர்கள் தெரியாமாலே சொல்லி வைத்தார்கள்?
இந்த திகிலூட்டும் விடியோ இதுதான்: விடியோவைக் காண.. இங்கே கிளிக் செய்யவும்.
நன்றி - Reptile Hunter FB page