ஃபேஷன் பொருட்களில் பெண்களைவிட ஆண்கள் அதிகளவில் கவனம் செலுத்துவதாக ஆய்வறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.
வளர்ந்துவரும் நவீன கால கட்டத்தில், இருந்த இடத்தில் இருந்துகொண்டே, ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த பொருட்களை தேர்வு செய்து வாங்குவதை மக்கள் பழக்கப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களைவிட ஆண்கள் ஃபேஷன் பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அதிலும், ஆண்களே இ.எம்.ஐயில் அதிக பொருட்கள் வாங்குவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நுகர்வோர் கடன் வழங்கும் பிரபல தளமான ஸெஸ்ட்மனியின்(ZestMoney) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், பெண்களை விட அதிகமான ஆண்கள் இ.எம்.ஐ(EMI) இல் ஃபேஷன் பொருட்களை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆண்களாக இருந்தனர். அவர்களது சராசரி ஆர்டர் விலை ரூ.16,000. அவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள். அதன்பிறகு, 31-35 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பொருட்களை வாங்குகின்றனர். மூன்றாவது இடத்தில் 18-24 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கின்றனர்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.