நீண்ட நேரம் இருக்கையில் அமரும்போது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் அலுவலகங்களில், முக்கியமாக ஐ.டி. நிறுவனங்களில் பலர் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அவ்வாறான நிலையில், செங்குத்தாக அல்லாமல், வளைந்த நிலையில் அமர்வது மோசமாக தோற்றமளிப்பதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வளைந்த நிலையில் உள்ள நமது உடல், உறுப்புகளின் இயற்கையான செயல்பாட்டை பாதிப்பதால் இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகின்றன. மேலும், உடல் மற்றும் மன அழுத்தத்திற்கும் இவை வழிவகுக்கும். சில நேரங்களில் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம்.
எனவே, வேலை செய்யும் இடங்களில் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்கவும், அவ்வப்போது இடங்களை மாற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது இருக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். நடக்காவிட்டாலும் அவ்வப்போது எழுந்து நிற்பது உடல்வலி ஏற்படுவதைத் தடுக்க உதவும். உடலை சரியான செயல்பாட்டில் தக்கவைத்துக்கொள்வதற்கு இவை பெரிதும் உதவுகின்றன.
சரியான நேரத்தில் சரியான முறையில் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு பயிற்சிக்கு பிறகும் சிறிது ஓய்வெடுப்பது சிறந்தது. தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும் இடுப்புப் பகுதியும் செங்குத்தாக இருக்குமாறு அமருங்கள். அதே நேரத்தில் இருக்கையும் உங்களுக்கு ஏற்றவாறு வசதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதும் முதுகின் வளைவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.