சாதாரணமாக நமக்கு பிடித்த உணவை பார்க்கும்போது அதை சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா? நல்ல பசியில் இருக்கும்போது பிடித்த உணவுகளை அதிகம் சாப்பிட மனம் விரும்பும்... அதிலும் இனிப்புகள் என்றால் பெரும்பாலானோர் கட்டுப்பாடின்றி சாப்பிடுவர்..
இவ்வாறு உணவைப் பார்த்தவுடன் நாம் சாப்பிட ஈர்க்கப்படுவதற்கும், குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக உண்ணுவதற்கும் காரணமான நியூரான்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நம்முடைய உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இன்றியமையாதது மூளை. உடலியக்கத்திற்கு மூளையில் உள்ள நியூரான்களே காரணமாக இருக்கின்றன. மிகவும் சிறிய எடை கொண்ட மூளையில் எண்ணற்ற நியூரான்கள் உள்ளன. இவையே நம்முடைய செயல்பாடுகளுக்கும் உணர்வுகளுக்கும் காரணமாக இருக்கின்றன.
அந்தவகையில், அமெரிக்காவின் எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு நடத்திய ஆய்வில், அதிகம் சாப்பிடத் தூண்டும் மூளையில் உள்ள நியூரான்கள் கண்டறியப்பட்டுள்ளன.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான பிராண்டன் வாரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆய்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.
மூளையின் ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நியூரான்களே, நம்மை உணவை நோக்கி சாப்பிட ஈர்ப்பதற்கும், அதிகம் சாப்பிடுவதற்கும் தூண்டுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த நியூரான்களை கட்டுப்படுத்தினால் நாம் அதிகம் உணவு உட்கொள்வதைத் தடுக்க முடியும் என்று விலங்குகளை வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
மேலும் நீரழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமான இனிப்பை நாம் விரும்புவதற்கு காரணமான நியூரான்களும் இதில் உள்ளன, மூளையின் அந்த பகுதியை ஒழுங்குபடுத்தினால், அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் வரக்கூடிய பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக அளவு கெட்ட கொழுப்பு, கரோனரி இதய நோய், உடல் பருமன் ஆகியவற்றுடன் தொடர்புடைய சில சிக்கல்களை சமாளிக்க முடியும் என்றனர்.