ஸ்பெஷல்

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

அப்துல் கலாமினால் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான டெஸ்ஸி தாமஸ்.

வ.மு. முரளி

நவீன  போர்க்களத்தின் அத்தியாவசிய ஆயுதமாகிவிட்ட ஏவுகணைகளுக்கு பிற நாடுகளைச் சார்ந்திராமல், நமக்கு நாமே சுயசார்புடன் இருப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (Defence Research and Development Organization- DRDO) மேற்கொண்டுள்ள ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தின் (IGMDP) சூத்திரதாரி, இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். 

அதேபோன்று, அப்துல் கலாமினால் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான டெஸ்ஸி தாமஸ். 

கேரள மாநிலம், ஆலப்புழாவில், 1963, ஏப்ரலில் டெஸ்ஸி தாமஸ் பிறந்தார். தந்தை வனத்துறை அதிகாரி. இளம் வயதில் தும்பா ஏவுதளத்தின் அருகே அவர்களது குடும்பம் குடியிருந்தது. அப்போது அங்கிருந்து ஏவப்பட்ட ராக்கெட்களைக் கண்டு, டெஸ்ஸிக்கு அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 

திருச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்த அவர், அடுத்து புனேவிலுள்ள ஆயுதத் தளவாட தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து, ஏவுகணைக் கல்வியில் எம்.டெக். பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பின்போது சிறந்த பாட்மின்டன் வீராங்கனையாகவும் அவர் விளங்கினார்.

அடுத்து குடிமையியல் தேர்வு எழுதினார். அதற்கான மற்றொரு தேர்வுக்கு அழைப்பு வந்த அதே நாளில், டிஆர்டிஓ அமைப்பிடமிருந்து பணி நேர்காணலுக்கும் அழைப்பு வந்தது. ராக்கெட்கள் மீதான ஆர்வத்தால், ஐஏஎஸ் கனவைத் துறந்து டிஆர்டிஓ சென்றார்.  ஹைதராபாத் மையத்தில் (Advanced System Laboratory- ASL) 1985-இல் இளநிலை விஞ்ஞானியாக இணைந்தார்.

அங்கு ராக்கெட் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அப்துல் கலாம் டெஸ்ஸியின் திறமையை உணர்ந்து, அவரை ஏவுகணை திட்டக்குழுவில் (1988) சேர்த்தார். 
ஆரம்பத்தில் அக்னி-3 ஏவுகணைத் திட்டத்தின் உதவி திட்ட இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். அதன் ஆரம்பகட்டத் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிப்படுத்தியதில் டெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானது. 3,000கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-3, மே 2008}இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதையடுத்து, 4,000 கி.மீ. தொலைவுக்கு பாயும் அக்னி- 4 ஏவுகணைத் திட்டம் துவங்கியது. அதன் திட்ட இயக்குநராக டெஸ்ஸி நியமிக்கப்பட்டார். 

இத்துறையில் முதல்முறையாக ஒரு பெண்ணாக அதனை டெஸ்ஸி சாதித்தார். அதற்கு அவரது தொழில்நுட்பத் திறனும், எடுத்த பணியை முடிக்கும் ஈடுபாடும் காரணமாகின. 2011-இல் அக்னி-4 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. 

இதனிடையே 5,000 கி.மீ. தொலைவுக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அக்னி-5 ஏவுகணைத் திட்டம் 2009-இல் துவங்கப்பட்டது. அதன் திட்ட இயக்குநராகவும் டெஸ்ஸி தாமஸ் பொறுப்பேற்றார். அக்னி-5 ஏவுகணை 2012, ஏப்ரல் 19-இல் வெற்றி இலக்கை எட்டியது.

இதில் டெஸ்ஸியின் குறிப்பிடத்தக்க பணியாகக் கருதப்படுவது, வளிமண்டலத்தில் அதீத திசைவேகத்தில் செல்லும் ஏவுகணையின் வெளிப்புறம் உருவாகும் உச்சபட்ச ( சுமார் 3,000 டிகிரி செல்சியஸ்) வெப்பத்தைச் சமாளிக்கும் தொழில்நுட்பமாகும். வளிமண்டல ஏவுகலன் நுழைவு முறை என்று அழைக்கப்படும்(Re entry Vehicle System- RVS) அந்தத் தொழில்நுட்பம் டெஸ்ஸி தாமஸின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியது. 

அதுமட்டுமல்ல, ஏவுகணையின் தாக்குதல் இலக்கில் ஏற்படும் உத்தேசப் பிழையின் அளவு (Circular error probable- CEP) 40 மீட்டருக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, உலக அளவில் மிகத் துல்லியமானவையாக அக்னி ஏவுகணைகள் மதிக்கப்படுகின்றன.

விஞ்ஞானி என்பதால் தனது குடும்பக் கடமைகளை டெஸ்ஸி தாமஸ் கைவிட்டுவிடவில்லை. அவர் புனே கல்லூரியில் படித்தபோது சக மாணவர் சரோஜ்குமார் படேலைக் காதலித்து, மதம் கடந்த மணம் புரிந்தார்.  

சரோஜ்குமார் கப்பற்படையில் கமாண்டராக உள்ளார். அவர்களுக்கு தேஜாஸ் என்ற மகன் உள்ளார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும், அதேசமயம் திறமையான விஞ்ஞானியாகவும் டெஸ்ஸி தாமஸ் விளங்குவதாக ஊடகங்கள் பாராட்டுகின்றன.

டெஸ்ஸி தாமஸின் சாதனைகளுக்காக அவருக்கு லால்பகதூர் சாஸ்திரி விருது, மதிப்புறு முனைவர் பட்டம் உள்ளிட்ட கௌரவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அக்னிபுத்ரி என்று பாராட்டப்படும் அவரது ஏவுகணை திட்டப் பணிகள் இன்றும் தொடர்கின்றன.
- வ.மு.முரளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

SCROLL FOR NEXT