சூர்யகாந்தி ஜெயலலிதா, முத்துராமன் நடிப்பில் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 1973 ல் வெளிவந்து 100 நாட்கள் ஓடி தந்தை ஈ.வே.ரா பெரியார் தலைமையில் வெற்றி விழா கண்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தை மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்யவிருக்கிறார்கள். செப் 16 ல் டிஜிட்டலில் இப்படம் வெளியாகிறது. இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் இப்படம் குறித்துப் பேசும் போது சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
முதல்வர்ஜெயலலிதாவிற்கு நடிப்பிற்காக பெயர் வாங்கித் தந்த திரைப்படங்களில் 'எங்கிருந்தோ வந்தாளுக்குப்' பிறகு இந்தப் படமும் மிக முக்கியமான படமாக பேசப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தின் வேலைக்குப் போகும் மனைவிக்கும், தற்காலிகமாக வேலை இழந்த கணவனுக்குமான ஈகோ பிரச்சினைகளின் ஊடாக கதை நகர்கிறது.
இந்தப் படத்தின் நடன இயக்கத்தில் தங்கப்பன் மாஸ்டருக்கு நடன உதவியாளராகப் பணியாற்றியவர் நடிகர் கமல் ஹாசன். கமலின் நடன இயக்கத்தில் 'ஓ மேரி தில்ரூபா.." பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார் ஜெயலலிதா என்றால் இன்றைய தலைமுறை கமல் ரசிகர்களுக்கு அது ஆச்சர்யமாக இருக்கும்.
கண்ணதாசனின் எவர்கிரீன் ஹிட் பாடலான "பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா" எனும் பாடல் இடம்பெற்ற படமும் இது தான். இந்தப் பாடலைப் பாடியதோடு அன்று கண்ணதாசனே திரையில் தோன்றி நடிக்கவும் செய்தார். பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் படத்தின் 100 வது நாள் வெற்றி விழாவுக்காக கிருஷ்ணவேணி தியேட்டரில் கண்ணதாசனுக்கு ஆளுயர கட் அவுட் எல்லாம் வைத்து கொண்டாடினார்கள்.
அதோடு இதன் 100 நாள் விழாவுக்கு தலைமை தாங்க அழைக்கையில் முதலில் மறுத்த தந்தை ஈ.வெ.ரா பெரியார் படத்தின் கதையம்சத்தை அறிந்த பிறகு தான் தயக்கமின்றி தலைமை தாங்க ஒத்துக் கொண்டார். என்பதும் இத்திரைப்படத்திற்கான சிறப்புகளில் ஒன்று.
இத்தனை சிறப்புகளுடன் கூடிய இந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு வெற்றி பெறுமா? என்று செப் 19 க்குப் பின் பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.