கமலை அசத்திய கதக் நடனப் புகழ் பிர்ஜ்ஜூ மஹராஜூக்கு இன்று பிறந்த நாள்!
விஸ்வரூபம் படத்தில் வரும் “ உன்னைக் காணாது நான்” என்ற பாடலுக்கு கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறார் பண்டிட் பிர்ஜ்ஜு மஹராஜ். நமது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதான “பத்ம விபூஷண்” உள்பட
கதக் நடனத்தின் ராஜாவாக இருக்கும் பிரிஜ்ஜு மஹராஜ் பிறந்த தினம் இன்று.
அவரைப் பற்றி சில அரிய தகவல்கள்.
பிரிஜ்ஜு மகாராஜ், 04-02-1938ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர்.
தந்தையில் பெயர் அச்சன் மஹராஜ், தாயார் பெயர் அம்மாஜி
தனது 7வது வயதில் டில்லியில் பொதுமக்கள் முன்னிலையில் முதன் முதலாக கதக் நடனம் ஆடியவர்.
தனது 10வது வயதிலேயே மாணவர்களுக்கு கதக் நடனம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தவர், இன்று வரை தொடர்கிறது.
பண்டிட் பிர்ஜ்ஜு மஹராஜ், கதக் நடனத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள சிறுவயதில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பயிற்சி எடுத்துள்ளார்.
கதக் நடனம் தனக்கு வரவில்லையென்றால், தனக்குத் தெரிந்த மெக்கானிக் வேலையை செய்து உன்னைக் காப்பாற்றுவேன் என்று சிறுவயதில் பண்டிட் தன் தாயிடம் கூறுவாராம்.
ஒரு சென்னை டிசம்பர் சீசன் போது நடன மேதைகளில் ஒருவரான பால சரஸ்வதி வீட்டில் 25 நாட்கள் தங்கி பல சபாக்களில் நடனக் கச்சேரி செய்தார். ஒவ்வொரு தடவையும் கச்சேரி முடிந்து வரும்போது, பாலசரஸ்வதி வீட்டு வாசலில் ஆர்த்தி தட்டுடன் நின்றது மறக்க முடியாத சம்பவங்களுள் ஒன்றாகும்.
கதக் நடன நிகழ்ச்சிக்காக, ரயில் டில்லி வந்தார். அவருடைய லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்காக கூலியாள் வந்தார். வந்த கூலியாள் பிரிஜ்ஜு மஹராஜாவின் சிறு வயது தோழன், பார்த்தவுடன் கூலியாளை கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.
அதேபோல் வேறோரு சந்தர்ப்பத்தில், டில்லி மின்டோ சாலையில், தன்னுடைய மோரிஸ் மைனர் காரில் செல்லும் போது, வண்டி இழுக்கும் தொழிலாளி, தன்னுடையை வண்டியில், அளவுக்கு அதிகமாக சுமைகளை ஏற்றிக் கொண்டு இழுக்க முடியாமல் இழுப்பதைப் பார்த்த மஹராஜ், உடனே தன்னுடைய காரை விட்டு இறங்கி, சிறிது தூரம் தொழிலாளியுடன் சேர்ந்து வண்டியை இழுத்துச் சென்று உதவி செய்தார்.
பிளவுபடாத அப்போதய சோவியத் ரஷ்யாவில் நடன நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒரு நிகழ்ச்சியில் “போல்ஸோய்” நடனக் கலைஞர்களின் அழகையும், அவர்களுக்கு தொப்பை இல்லாமல் இருப்பதையும் பார்த்து வியந்தார். அந்த சமயத்தில் பிரிஜ்ஜு மஹராஜூக்கு சிறியதாக தொப்பை இருந்தது. “போல்ஸோய்’ நடனக்கலைஞர்களை பார்த்தவுடன் நடனக்கலைஞர்களுக்கு உடல் அழகு நடனத்தில் எந்த அளவுக்கு அழகு சேர்க்கிறது என்பதை உணர்ந்தார்.
நடனத்தைத் தவிர ஏறக்குறைய அனைத்து சங்கீத வாத்யங்களையும் (Musical Instruments) வாசிக்கத் தெரிந்தவர். ஒரு முறை, மறைந்த சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் சிதார் வாசிக்க பண்டிட் மஹராஜ் தபேலா வாசித்துள்ளார்.
1982ல் நடந்த ஏசியாட் 82 ஆசிய விளையாட்டுப் போட்டியில், கபடி, கோ-கோ, கயிறு இழுக்கும் போட்டி மற்றும் இதர விளையாட்டுக்களையும் நடனத்துடன் இணைத்து புதுமையான நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அன்றைய காலகட்டத்தில் இந்நிகழ்ச்சி பல பாராட்டுதல்களைப் பெற்றது.
நமது நாட்டின் பாரம்பரிய நடனங்களான ஒடிசி, கதக் மற்றும் பரதநாட்டியம் உலகப்புகழ் பெற்றது. இந்த நடனங்களில் புகழ் பெற்றவர்களான கேளுச்சரன் மோகபத்ரா (ஒடிசி) வேம்பட்டி சின்ன சத்யம் (குச்சிபுடி) மற்றும் கல்யாணசுந்தரம் பிள்ளை (பரதநாட்டியம்) ஆகியோரோடு இணைந்து “கிருஷ்ண பாரிஜாதம்” என்ற நாட்டிய நிகழ்ச்சியை உருவாக்கினார். இந்த நாட்டிய நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞர் சஞ்சுக்தா பானிகிரகி ருக்மணியாகவும், வாணி கணபதி (கமல்ஹாசனின் முன்னாள் மனைவி) கிருஷ்ணாவாகவும் மற்றும் சுவாதி ஷென் சத்யபாமாகவும் நடித்தனர்.
1977ஆம் ஆண்டு, சத்தியஜித் ரே இயக்கிய “ஷத்ரஞ் கி கிராளி” என்ற படத்திற்கு பாடல் எழுதி நடனமும் அமைத்துள்ளார். இந்தப் படம்தான் திரைப்படத்திற்கு நடனம் அமைத்த முதல் படம், பிறகு, தேவதாஸ், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். விஸ்வரூபம் படத்தில் வரும் “உன்னைக் காணாது நான்” என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
பிர்ஜ்ஜூ மஹராஜ் கமலுக்கு கதக் கற்றுக் கொடுப்பதை இந்த வீடியோவில் காணலாம்....
விஸ்வரூபம் படத்தில் வரும் “ உன்னைக் காணாது நான்” என்ற பாடலுக்கு கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறார் பண்டிட் பிர்ஜ்ஜு மகாராஜ். நமது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதான “பத்ம விபூஷண்” உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.