சுவையான அதிரசம் செய்வது பெரிய விஷயம் இல்லைங்க.. பாகு எடுக்கும் பதமும், மற்ற விஷயங்களில் சரியான கவனமும் இருந்தாலே போதும்.
ஒரு முறை ஏதேனும் தவறு நேர்ந்தாலும் அடுத்தமுறை தவறுகளை சரி செய்தாலே எளிதாக அதிரசம் செய்வதில் வல்லவராகிவிடலாம்.
அதிரசம் தேவையானவை:
பச்சரிசி -அரை கிலோ
வெல்லம் - அரை கிலோ
ஏலக்காய் (பொடித்தது) - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
இதையும் படிக்க | ரூம் போட்டு யோசிப்பாங்களோ? கடத்தல்காரர்களின் படைப்பாற்றலை வியக்கும் அதிகாரிகள்
முதலில் பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மெல்லிய வெண்ணிறத் துணியில் பரப்பி நிழல்பட காய வைக்கவும். ஈரம் காய்ந்த பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமாக உள்ள பாத்திரத்தில் வெல்லத்தைத் தூளாக்கிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சவும்.
பாகுப் பதமாக வரும்போது ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பாகை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
பாகு சூடாக இருக்கும் போதே, பச்சரிசி மாவை சிறிது, சிறிதாக கொட்டி கிளறவும். இந்த கலவை சிறிது ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, எண்ணெய் தடவியுள்ள வாழையிலை அல்லது பாலித்தீன் பேப்பரில் அதிரசங்களாகத் தட்டிக் கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தட்டி வைத்துள்ள மாவைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
நன்றாக வெந்து, சிவந்த நிறமானதும் எண்ணெய்யை முழுமையாக வடித்து அதிரசத்தை எடுத்து, ஆறிய பின்பு பாத்திரத்தில் வைக்கவும்.
சுவையான அதிரசம் தயார்.