ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே.பரமசிவன். காங்கிரஸ் கட்சி மீது தீராப்பற்று வைத்துள்ள இவரது தற்போதைய வயது 101. ஈரோட்டில் 2 மாதங்களுக்கு முன்பு அரசியலைக் கடந்து, அனைத்து தரப்பினரும் இணைந்து இவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
பால் கூட்டுறவுச் சங்கம் மூலம் கொங்கு மண்டலத்தில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். 1962-1967 வரையிலான காலகட்டத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினராகப் பணியாற்றியவர். கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்.
ஈரோடு ஆவின் நிறுவனத்தைத் தொடங்கியவர். சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில் தலைவராக இருந்துள்ளார். மஞ்சள் ஏலம் நடைபெறும், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ள இடம் இவருக்குச் சொந்தமானது.
இந்தியாவிலேயே மூத்த அரசியல்வாதி, முன்னாள் எம்.பி.களில் மூத்தவர் என்ற பெருமைகளுக்கு உரிய எஸ்.கே.பி., தன்னுடைய தேர்தல் அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொண்ட விவரம்-
மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு பள்ளிப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கினேன். பள்ளிப் படிப்பை, ஈரோடு, பவானி, கோவை பகுதிகளில் முடித்த நான், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்தேன். அப்போதே முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டேன். முதன்முதலாக 1962-இல் நடந்த 3 ஆவது மக்களவைத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 1,57,739 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். எனக்கு எதிராக திமுக சார்பில் உடுமலை நாராயணன் போட்டியிட்டார். 1967-இல் நடைபெற்ற தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பில் ஈரோடு தொகுதி நீக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டேன். இதில் நான் தோல்வியடைந்தேன். உடுமலை நாராயணன் வெற்றிபெற்றார். அதன்பிறகு தேர்தலில் போட்டியிடவில்லை.
தேர்தல் செலவு ரூ.20 ஆயிரம்: நான் தேர்தலில் போட்டியிட்டபோது மொத்தமாக ரூ.20 ஆயிரம்தான் செலவு செய்திருப்பேன். மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 5 எம்எல்ஏக்களிடம் அந்தப் பணத்தை பிரித்துக் கொடுத்தேன். அவர்கள்தான் செலவு செய்தனர்.
எனக்காகப் பிரசாரம் செய்ய சி.சுப்பிரமணியம் வந்தார். அப்போது, நான் மக்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. மக்களும் வாக்குறுதி ஏதும் எதிர்பார்க்கவில்லை. நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் என்னைத் தேர்வு செய்தனர்.
ஒன்று அல்லது 2 கார்களில் சென்று ஒரு கிராமத்தில் ஓர் இடத்தில் நின்று ஓட்டு கேட்போம். இப்போது உள்ள பகட்டு அப்போது இல்லை. கதர் ஆடை அணிந்து சென்றால் மக்கள் மதிப்பார்கள்.
ஆனால், இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. வேட்பாளர்களும் மாறிவிட்டதோடு, மக்களிடையேயும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இளைஞர்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
வாரிசு அரசியலில் தவறேதும் இல்லை: முந்தைய காலத்தில் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. இந்தியா-சீனா இடையே போர் நடந்தபோது, பிரதமர் நேருவை மனைவியுடன் சென்று சந்தித்தேன். அப்போது, என் மனைவி லட்சுமியம்மாள் கையில் அணிந்திருந்த 10 பவுன் வளையல்களைக் கழற்றி, யுத்த நிதிக்காக நேருவிடம் கொடுத்தார். அந்த அளவுக்கு நாட்டின் மீதும், தலைவர்கள் மீதும் மக்களுக்கு பற்றும், மதிப்பும் இருந்தது.
தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நன்கு பழகியிருக்கேன். வாரிசு அரசியலில் தவறு ஏதும் இல்லை. கட்சியில் தலைமைப் பதவி முக்கியமானது. எல்லோரும் ஏற்கும் ஒருவர்தான் தலைவராக இருக்க வேண்டும். அந்த ஒருவர் வாரிசாக இருந்தால் வேறு என்ன செய்ய முடியும்? அவரைத் தவிர்த்து வேறு ஒருவர் முன்னிறுத்தப்பட்டால் கட்சியில் குழப்பம் தான் ஏற்படும். உடல்நிலை ஒத்துழைத்தால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற என்னால் முடிந்த வரை உழைப்பேன் என்றார் எஸ்.கே.பரமசிவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.