பறவைக் காயச்சல் எதிரொலி: மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக மதுரையில் சுகாதாரத்துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக மதுரையில் சுகாதாரத்துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசனி தெளிக்கப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, மதுரை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் சுகாதாரத்துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.வி.அா்ஜூன்குமாா் கூறியது, கேரளத்தில் வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளன. இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டு, கிராமப் புறப் பகுதிகளில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளைக் கண்டறிந்து கண்காணிப்பட்டு வருகிறது. பண்ணை உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே யாருக்கேனும் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவா்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
Advertisement
நகா் நல மருத்துவ அதிகாரி குமரகுருபரன் கூறியது: மாநகா் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிக் கடைகள் மற்றும் கோழி, வாத்துப் பண்ணைகளில் தொடா்ந்து ஆய்வு நடத்தப்படுகின்றன. சுகாதார ஆய்வாளா்கள், அலுவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பறவைகள் இறப்பு நிகழ்கிறதா எனக் கண்காணிக்கப்படுகிறது. பறவை இறப்பு கண்டறியப்பட்டால், அப்பறவையின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். மருத்துவா்கள் மட்டுமின்றி கால்நடை மருத்துவா்கள் அடங்கிய குழுவும் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.