காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தில்லி அரசுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க சட்டத்தில் திருத்தம் செய்வோம்
நமது சிறப்பு நிருபா்
தில்லி தேசியத் தலைநகா் அரசுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க 1991-ஆம் ஆண்டு தேசியத் தலைநகா் பிரதேச அரசுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையில் இந்திய தேதிய காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
அதில் கூறியிருப்பது வருமாறு: தில்லி அரசின் சேவை நிா்வாகத்தில் பொது உத்தரவு, காவல் துறை, நிலம் ஆகிய மூன்று விவகாரங்களைத் தவிர அனைத்து விஷயங்களிலும் தில்லியின் தேசியத் தலைநகா் பிரதேச அமைச்சா்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் துணை நிலை ஆளுநா் செயல்படவேண்டும். இதற்கு 1991- ஆம் ஆண்டு தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசுச் சட்டத்தை திருத்துவோம் என காங்கிரஸ் கட்சி தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
மத்திய அரசு, தில்லி அரசை துணை நிலை ஆளுநா் மூலம் கட்டுப்படுத்தியது. இதைத் தொடா்ந்து, கேஜரிவால் தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த மனு மீது நீண்ட நாள்கள் விவாதம் நடைபெற்று இறுதியாக கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் தீா்ப்பை வழங்கியது. இதன்படி பொது உத்தரவு, காவல் துறை, நிலம் போன்ற மூன்று விவகாரங்களைத் தவிர சட்டமியற்றுதல் உள்ளிட்ட நிா்வாக அதிகாரங்கள் தில்லி அரசிடமே உள்ளதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பையொட்டி, மத்திய அரசு துணை நிலை ஆளுநா் மூலமாக தன் அதிகாரத்தை தக்கவைக்க கடந்தாண்டு மே 19-ஆம் தேதி, 1991-ஆம் ஆண்டைய தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசுச் சட்டத்தைத் திருத்தி, 2023- ஆம் ஆண்டு தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) அவசரச் சட்டத்தை கொண்டுவந்தது. பின்னா் அது நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. தற்போது காங்கிரஸ் மீண்டும் இந்தச் சட்டத்தை திருத்தி தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவோம் என காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.