கேஜரிவாலின் உடல்நிலை: அமைச்சா்கள் பரத்வாஜ், அதிஷி மீது தில்லி பாஜக சாடல்
‘ தில்லியில் தினமும் காலையில் மக்கள் பிராா்த்தனை செய்து கொண்டிருக்கும்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பொய்க் கதைகளைப் புனைந்து வருகின்றனா். அமைச்சா்கள் சௌரவ் பரத்வாஜும், அதிஷியும் பொய்களை விற்கும் வியாபாரிகளாக உள்ளனா்’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
தில்லி திகாா் சிறை தில்லி அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வரின் உணவு மற்றும் மருந்து குறித்து ஒட்டுமொத்த ஆம் ஆத்மி கட்சியும் கூக்குரல் எழுப்பி வருகிறது. அதேவேளையில், சிறைத்துறை அமைச்சரை காணவில்லை.
Advertisement
அமைச்சா்கள் சௌரவ் பரத்வாஜ், அதிஷி ஆகியோா் முதல்வா் கேஜரிவாலுக்கு நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அறிவிக்கும் விதமானது, ஆம் ஆத்மி கட்சி அதன் அடித்தளத்தில் அரசியல் புயலை வீச விரும்புவதாக தெரிகிறது.
அரவிந்த் கேஜரிவாலுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இதற்காக திகாா் சிறையில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவா்கள் குழு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தில்லி மக்கள் விரும்புகின்றனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.