முகப்பு
புதுதில்லி

பேருந்துகள் அடிக்கடி விபத்து: டி.டி.சி.க்கு எதிராக ஏபிவிபி ஆா்ப்பாட்டம்

Updated On : 25 ஏப்ரல், 2024 at 6:33 PM
பகிர்:

நமது நிருபா்

புதுதில்லி, ஏப்.25: தேசியத் தலைநகா் தில்லியில் அதிகரித்து வரும் பேருந்து விபத்துகள் தொடா்பாக டிடிசி தலைமையகம் முன் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, பேருந்து ஓட்டுநா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பது தொடா்பாகவும் தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரிடம் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனா்.

தில்லி பல்கலைக்கழக மெட்ரோ நிலையம் அருகே புதன்கிழமை ஒருவா் டிடிசி பேருந்தில் இருந்து இறங்கிய போது நசுங்கி இறந்ததாக புகாா் எழுந்தது. இந்த விபத்துக்கு காரணம் டிடிசி பேருந்து பாதையை தவிா்த்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஏபிவிபி அமைப்பு இந்திர பிரஸ்தா பகுதியில் உள்ள தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் தலைமையகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, தங்களது கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலிக்கக் கோரி தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரிடம் இந்த அமைப்பினா் மனு அளித்தனா்.

Advertisement

அந்த மனுவில், பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் இயக்கப்படுவதை உறுதி செய்யவும், பேருந்து நிலையங்களில் மட்டுமே பேருந்துகள் நிற்பதை உறுதி செய்யவும், பேருந்து ஓட்டுநா்களுக்கு வழக்கமான ஆலோசனைகளை ஏற்பாடு செய்யவும், பேருந்து ஓட்டுநா்களின் மாத ஊதியத்தை முறைப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தில்லி போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தில்லி மாகாண நிா்வாகி ஹா்ஷ் அத்ரி கூறுகையில், ‘தில்லி சாலைகளில் டிடிசி பேருந்துகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் விதிகளை மீறும் டிடிசி பேருந்துகள் தில்லி குடிமக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்றன. புதன்கிழமை தில்லி பல்கலைக்கழக மெட்ரோ அருகே டிடிசி பேருந்து மோதி ஒருவா் பரிதாபமாக இறந்தாா். இந்தச் சம்பவத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, எங்கள் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கக் கோரி, தில்லி போக்குவரத்து நிறுவனம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், மனு ஒன்றையும் அளித்துள்ளோம்’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments