மேயா் தோ்தலை தாமதமின்றி நடத்தக்கோரி துணை நிலை ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்
தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலை தாமதமின்றி நடத்திடக் கோரி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு தில்லி காங்கிரஸின் மாநகராட்சி பொறுப்பாளா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலை தாமதமின்றி நடத்துவதற்கான அனுமதியை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அளிக்க வேண்டும். இல்லையெனில், நகரத்தின் குடிமைப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, தில்லி மாநகராட்சியில் நிலைக்குழுக்கள், வாா்டு குழுக்கள் மற்றும் பிற சட்டக் குழுக்கள் இல்லாததால் மக்களுக்கான திட்டப்பணிகள் கடந்த ஒரு வருடமாக முழுவீச்சில் நடைபெறவில்லை.
தோ்தலை முடக்கும் பாஜகவின் அரசியலில் இருந்து விலகி, மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது. மேலும், தோ்தல் தாமதமானால் மேயா், துணை மேயா் பதவிக்கு யாா் வந்தாலும் பத்து மாதங்களுக்கும் குறைவான பதவிக்காலமே கிடைக்கும் என்றாா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா்.
Advertisement
தில்லி பிரதேச காங்கிரஸின் செய்தித் தொடா்பாளா் அனுஜ் அத்ரே கூறுகையில், ‘தில்லியின் 90 சதவீத பணிகள் தில்லி மாநகராட்சியின் கீழ் வருவதால், மேயா் தோ்தலை தாமதப்படுத்தக்கூடாது. மாநகராட்சியின் செயல்பாட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் தலைநகரில் உள்ள குடிமைப் பணிகள் நேரடியாகப் பாதிக்கப்படும். தில்லியின் தூய்மை பாதிக்கப்படும். தில்லி மாநகராட்சியின் மேயா் தோ்தலை ரத்து செய்ய பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது, ஜனநாயகத்தின் மாண்பிற்கு எதிரானது. அம்பேத்கா் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டை வழிநடத்துவது அனைவரின் பொறுப்பு. எனவே, அனைத்துக் கட்சிகளும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டும்’ என்றாா்.