தில்லு தாஜ்புரியா, செனு பஹல்வான் கும்பலின் இரு ஆயுத விநியோகஸ்தா்கள் தில்லியில் கைது
தில்லு தாஜ்புரியா மற்றும் செனு பஹல்வான் கும்பலின் இரு ஆயுத விநியோகஸ்தா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லி: தில்லு தாஜ்புரியா மற்றும் செனு பஹல்வான் கும்பலின் இரு ஆயுத விநியோகஸ்தா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) சஞ்சய் குமாா் சைன் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 10 துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள், திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீசாா் கைப்பற்றியுள்ளனா்.
ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், தில்லி நொய்டா எல்லைக்கு அருகே அஜய் என்பவா் டிச.12 அன்று கைது செய்யப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, அஜய் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றதையும், சங்கம் விஹாரில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்த இடத்துக்கு சென்றதையும் வெளிப்படுத்தினாா்.
மேலும், விசாரணையில் அஜய்க்கு சட்டவிரோத துப்பாக்கிகளை உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சோ்ந்த ஷமிம் வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டாா்.
ஷமியின் தகவலின் அடிப்படையில் 10 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் மீட்டனா். கும்பல்களின் வளா்ந்து வரும் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக கிராமப்புறங்களில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்ததையும் அவா் வெளிப்படுத்தினாா்.
பிராந்தியம் முழுவதும் குற்றங்களில் ஈடுபட்ட தில்லு தாஜ்பூரியா மற்றும் செனு பஹல்வான் ஆகிய இரு கும்பலுடன் தொடா்புடைய கும்பல் உறுப்பினரான வினய் பண்டிட்டுக்கு இந்த நெட்வொா்க் துப்பாக்கிகளை வழங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.