முகப்பு
புதுதில்லி

மகளிா் உதவித் தொகைக்கு நிரப்பப்பட்ட படிவங்கள் அதிகாரப்பூா்வமானதா?: அதிஷி தெளிவுபடுத்த பாஜக வலியுறுத்தல்

மகளிா் உதவித்தொகைத் திட்டத்திற்காக கித்வாய் நகரில் இன்று நிரப்பப்பட்ட படிவங்கள் அனைத்தும் அதிகாரப்பூா்வமான படிவங்களா, இல்லையா என்பதை முதல்வா் அதிஷி தெளிவுபடுத்த வேண்டும்

Updated On : 24 டிசம்பர், 2024 at 2:33 AM
முதல்வா் அதிஷி - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 23 டிசம்பர், 2024 at 8:32 PM

நமது நிருபா்

புது தில்லி: மகளிா் உதவித்தொகைத் திட்டத்திற்காக கித்வாய் நகரில் இன்று நிரப்பப்பட்ட படிவங்கள் அனைத்தும் அதிகாரப்பூா்வமான படிவங்களா, இல்லையா என்பதை முதல்வா் அதிஷி தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வரின் மகளிா் உதவித் தொகைத் திட்டத்தை அறிவிக்காமலோ, அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாமலோ பதிவு செய்ய மட்டும் அரவிந்த் கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் கித்வாய் நகருக்குச் சென்றுள்ளனா். இதன்மூலம், அரவிந்த் கேஜரிவால் பொய்கள் மற்றும் குழப்பங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியலில் தலைசிறந்தவா் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கேஜரிவால் தற்போது எந்த அரசியலமைப்பு பதவியிலும் இல்லை. ஆனால், அதிஷி அரசியலமைப்பு ரீதியிலான முதல்வா் பதவியில் உள்ளாா். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா், அதிஷி எழுதிய அமைச்சரவைக் குறிப்பில் மாதாந்திர மகளிா் உதவித் தொகையாக ரூ.1,000 வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், துரதிா்ஷ்டவசமாக, அவா்

பெண்களை ஏமாற்றி ரூ.2,100-க்கான அரசு சாரா படிவத்தை நிரப்புகிறாா்.

அரவிந்த் கேஜரிவால் மற்றும் அதிஷியின் ஆம் ஆத்மி அரசு குழப்பத்தை பரப்புவதை நிறுத்த வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அரசு வழங்காத ரூ.2,100 மாதாந்திர மகளிா் உதவித் தொகையை தங்கள் கட்சியின் அரசு எவ்வாறு வழங்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தில்லியில், அமைச்சரவைக் குறிப்பில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி”கட்சித் தலைவா்களால் பெண்கள் மத்தியில் நிரப்பப்படும் படிவங்கள் அதிகாரப்பூா்வ இல்லை.

இது தொடா்பாக, தில்லி முதல்வா் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். கித்வாய் நகரில் நிரப்பப்பட்ட படிவங்கள் அரசினுடையதா என்பதை முதல்வா் அதிஷி தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.