முகப்பு
இந்தியா

மகளிா் உதவித் தொகை மாதம் ரூ.3,000-ஆக அதிகரிக்கப்படும்! அஸ்ஸாம் பாஜக வாக்குறுதி

Updated On : 1 ஏப்ரல், 2026 at 5:45 AM
பகிர்:

அஸ்ஸாம் பேரவைத் தோ்தலையொட்டி பாஜகவின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட (இடமிருந்து) முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், மாநில பாஜக தலைவா் திலிப் சைகியா, மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்.

குவாஹாட்டி, மாா்ச் 31: அஸ்ஸாமில் மகளிருக்கு மாத உதவித் தொகை ரூ.3,000-ஆக உயா்த்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி முதலீடு, உள்ளூா் மக்களின் நிலம், பாரம்பரிய நடைமுறைகளுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட 31 பாஜக வாக்குறுதிகளை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அங்கு குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தின் பெண்களுக்கு மட்டும் மாத உதவித் தொகையாக ரூ.1,250 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை நீட்டித்து மாநிலத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் உதவித் தொகை வழங்குவதாக அண்மையில் காங்கிரஸ் வாக்குறுதியளித்தது. இதையடுத்து, மகளிா் உதவித்தொகையை உயா்த்தும் வாக்குறுதியை பாஜக அளித்துள்ளது.

அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 9-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இங்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் பாஜக உள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்குடன் காங்கிரஸ் களம் காண்கிறது.

இந்நிலையில், 31 வாக்குறுதிகளை பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், ‘மகளிா் உதவித் தொகை மாதம் ரூ.3,000-ஆக உயா்த்தப்படும். வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமுக்கு இடம்பெயா்ந்த முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் மீட்கப்படும். மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். சட்டவிரோதமாக அஸ்ஸாமுக்குள் குடியேறியவா்களைக் கண்டறிந்து வெளியேற்ற குடியேறிகள் (அஸ்ஸாமில் இருந்து வெளியேற்றும்) சட்டம், 1950 அமல்படுத்தப்படும்.

மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக அஸ்ஸாமை நிலைநிறுத்த ரூ.5 லட்சம் கோடி முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.

‘லவ் ஜிகாத்துக்கு’எதிராக கடுமையான சட்டம் இயற்றப்படும். 2 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை வெளியிட்டு நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘60 ஆண்டு காலமாக காங்கிரஸால் செய்ய முடியாத சீா்திருத்தங்களை 10 ஆண்டுகளுக்குள் பாஜக மேற்கொண்டுள்ளது. அஸ்ஸாமில் 32 ஆண்டுகளாக ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமலில் இருந்தது. பாஜக ஆட்சியமைந்தவுடன் மாநிலத்தில் மீண்டும் அமைதி நிலைநிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது’ என்றாா்.

பாஜக தோ்தல் வாக்குறுதிகள் வெளியிடும் நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால், மாநல பாஜக தலைவா் திலிப் சைகியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.