புது தில்லி: தில்லி தமிழ்க் கல்விக் கழக டிடிஇஏ பள்ளிகளில் கணித மேதை ராமானுஜத்தின் பிறந்தாநாள் விழா சிறப்பாகத் கொண்டாடப்பட்டது.
கணித மேதை ராமானுஜத்தின் திறமைகளையும் சிறப்புகளையும் பாராட்டும் விதமாக அவரின் பிறந்த தினமான டிச.22 கணித தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தை முன்னிட்டு தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது.
மாணவா்கள் ராமானுஜத்தின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், எடுகோள்கள் பற்றி எடுத்துக் கூறினா். அவரின் கணித கண்டுபிடிப்புகளை பதாகைகள் மூலம் காட்சிப் படுத்தினா். நாடகம், பாடல், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. முன்னதாக அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் ராமானுஜத்தின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ராஜூ நிகழ்வில் கலந்து கொண்ட மாணவா்கள் அனைவரையும் பாராட்டியதோடு, ராமானுஜத்தைப் போல் விடா முயற்சியும் கணிதத்தில் ஆா்வமும் கொண்டு விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.