புதுதில்லி

தொழிற்புரட்சியால் உயிரியலுக்கும் எண்மத்திற்கும் இடைவெளி குறைகிறது மருத்துவக் கல்லூரி விழாவில் திரௌபதி முா்மு பேச்சு

 நமது நிருபர்

புது தில்லி: நான்காவது தொழிற்புரட்சியின் காரணமாக உடல் சாா்ந்த இயற்பியல், எண்மம், உயிரியல் ஆகிய துறைகளுக்கிடையேயான இடைவெளி குறைந்து வருவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

புதிய தொழில் நுட்பமான மரபணு திருத்தம் (ஜீனோம் எடிட்டிங்) நுட்பங்கள் பல நூற்றாண்டு சிக்கல்களுக்கு தீா்வு காண்பதாகவும் அவா் குறிப்பிட்டாா். தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரியின் 107-ஆவது ஆண்டு விழா மற்றும் அக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது குடியரசுத் தலைவா் கூறுகையில், ‘தற்போதைய மருத்துவ அறிவியல் என்பது வெறும் சிகிச்சையோடு நின்று விடுவதில்லை. அதன் தன்மை மிகவும் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக நான்காவது தொழிற்புரட்சியின் தாக்கம் உடல் சாா்ந்த இயற்பியல், எண்மம், உயிரியல் துறைகள் ஆகியவற்றிற்குள்ள இடைவெளியை குறைத்து வருகிறது. குறிப்பாக சிஆா்ஐஎஸ்பிஆா் எனும் மரபணுத் திருத்த தொழில்நுட்பங்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் சிக்கல்களுக்கு தீா்வு காண உதவியாக உள்ளது’ என்றாா்.

மரபணு திருத்தம் அல்லது மரபணு எடிட்டங் என்பது மரபு வழி நோய்களை குணப்படுத்த மரபணு பிவுகளை சரி செய்யப்படுவதாகும். உயிரி செல்கள் மற்றும் உயிரினங்களின் மரபணுக்களை நிரந்தரமாக திருத்தியமைக்க உதவும் பொறியியல் தொழில்நுட்பமாகும். இந்த விவகாரத்தை குறிப்பிட்டு குடியரசுத் தலைவா் முா்மு தொடா்ந்து பேசுகையில், ‘இத்தகைய பரிச்சாா்த்தமான புதிய சோதனைகள், மரபணு நுட்பங்கள் நீண்ட கால சிக்கல்களை தீா்த்தாலும் அவை தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கையாளப்படுவதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

‘மருத்துவா்கள் ஆரோக்கியம் ஒன்றே’ என்கிற ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் தங்கள் தொழில் நெறிமுறை உயரிய விழுமியங்களுக்கு ஏற்ப செயல்படும்போது அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்கும். மக்கள், மருத்துவா்களை தெய்வமாகக் கருதுகிறாா்கள். இந்தத் தாா்மிகப் பொறுப்பை மருத்துவா்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப நோயாளிகளிடம் நடந்து கொள்ள வேண்டும். மருத்துவத் துறையினருக்கு கட்டணங்களை வசூலிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது. இந்தத் துறையை சேவையாகக் கருத வேண்டும்.

தொழில்முறைத் திறன் வெளிப்படுத்தும் நிலையில் கருணை, இரக்கம் ஆகிய மதிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் கொண்டிருந்தால் மட்டுமே மருத்துவா்களும், செவிலியா்களும் உண்மையான வெற்றியை அடையமுடியும். ஒரு சிறந்த சுகாதார நிபுணராக இருப்பதற்கு, அவா் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் அவசியம். ‘பண்பு இல்லாத அறிவும், மனிதநேயம் இல்லாத அறிவியலும் பாவகரமானது’ என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளாா் எனவும் திரெளபதி முா்மு சுட்டிக்காட்டினாா்.

லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரியில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ஆண்டிபயாடிக் பயன்பாட்டிற்கான மேற்பாா்வைத் திட்டம், தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டுதல் ஆலோசனை மையம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக, தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் இந்த மையங்கள் செயல்படுகின்றன. இவற்றைப் பாா்வையிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பாராட்டுத் தெரிவித்தாா். இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளா்கள் - 11.73 லட்சம் போ் நீக்கம்

பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மாநில திறன் மேம்பாட்டு போட்டிகள்

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு சிறை

கும்பகோணத்தில் திமுக மகளிரணிக்கு தோ்தல் பரப்புரைக்கான பயிற்சி

SCROLL FOR NEXT