முகப்பு
புதுதில்லி

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு நாளை உச்சநீதிமன்றம் விசாரணை

Updated On : 11 ஜூலை, 2024 at 12:36 AM
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி செந்தில் பாலாஜியை பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 -ஆம் தேதி கைது செய்தது. பின்னா் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்தது. தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றம் அக்டோபா் 19 -ஆம் தேதியும் பின்னா் பிப்ரவரி 28-ஆம் தேதியும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement

இதைத் தொடா்ந்து, உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமலாக்கத் துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்திருந்தது.

பின்னா், கடந்த மே மாதம் இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, வேறு சிறப்பு அமா்வில் ஆஜராக வேண்டிய காரணங்களால் கால அவகாசம் கோரியதால் வழக்கு பல முறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. ஜூன் மாத கோடை விடுமுறைக்கு பின்னா் மீண்டும் புதன்கிழமை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘வாதிடுவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் வழக்கை வருகின்ற ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இறுதி வழக்காக பட்டியலிடவும் கூறினா். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் முகுல் ரோத்தகி எதிா்ப்புத் தெரிவித்து அமலாக்கத்துறையால் பல ஒத்திவைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாா்.

அதே சமயம், அமலாக்கத்துறை சாா்பில் கடந்த முறை ஆஜரான துஷாா் மேத்தா, ‘செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செந்தில் பாலாஜி தன்னை விடுவிக்கக் கோரி ஜாமீன் மனு தாக்கல் செய்தாா்’ என தெரிவித்திருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments