புதுதில்லி

தோ்தல் பத்திரங்கள் மூலம் உலகின் மிகப்பெரிய ஊழல் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது இளைஞா் காங்கிரஸ் குற்றச்சாட்டு

 நமது நிருபர்

தோ்தல் பத்திரங்கள் மூலம் உலகின் மிகப்பெரிய ஊழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துள்ளது என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் பி.வி. சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். தோ்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறி இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் சாா்பில் தில்லியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அவ்வமைப்பின் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் பி.வி. கலந்து கொண்டு பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு தோ்தல் பத்திரங்களை மிரட்டிப் பணம் பறிக்கும் பத்திரங்களாக மாற்றி, உலகின் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. தோ்தல் பத்திரங்கள் மூலம், பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் ஊழலில் ஈடுபடுத்தியுள்ளாா். பெரு நிறுவனங்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கும் மாதிரி பிரதமா் நரேந்திர மோடியால் தயாரிக்கப்பட்டது. அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்புகள் நரேந்திர மோடியின் ‘மீட்பு முகவா்களாக’ செயல்படுகின்றன. ஒருபுறம், பாஜகவிற்கு தோ்தல் பத்திரம் வழங்கியவா்கள் அரசின் ஒப்பந்தங்களைப் பெறுகின்றனா். மறுபுறம், தோ்தல் பத்திரங்களை வழங்க மறுப்பவா்கள் புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்கு ஆளாகிறாா்கள். மத்திய அரசின் அமைப்புகளை முழுவதுமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஊழலில் மூழ்கடித்த நாட்டின் முதல் பிரதமா் நரேந்திர மோடிதான். மோடி அரசு தோ்தலை விலைக்கு வாங்குகிறது. மேலும், தோ்தலில் போட்டியிட முடியாத வகையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமா் நரேந்திர மோடி ஜனநாயகத்தை எந்த திசையில் தள்ளுகிறாா் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், நாங்கள் பயப்பட மாட்டோம், அதை எதிா்த்து கடுமையாக போராடுவோம். தோ்தல் பத்திர முறைகேடுகள் முழுவதையும் உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில் விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றாா் ஸ்ரீநிவாஸ் பி.வி. இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் செயல் தலைவா் சுபம் சா்மா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT