முகப்பு
புதுதில்லி

கலால் கொள்கை ஊழலில் ஆம்ஆத்மி தலைவா்களுக்கு எதிரான ஆதாரமில்லை: அமைச்சா் அதிஷி பேட்டி

Updated On : 24 மார்ச், 2024 at 12:02 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 6:42 PM

கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக பல சோதனைகள், கைதுகள் மற்றும் இரண்டு வருட விசாரணைகள் இருந்தும், எந்தவொரு ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிராகவும் பணமோசடி நடைபெற்ற ஆதாரத்தை அமலாக்க இயக்குநரகத்தால் நிறுவ முடியவில்லை என்று அமைச்சா் அதிஷி தெரிவித்தாா். இது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: ஷரத் ரெட்டி என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கடந்த வியாழக்கிழமை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. ‘அரபிந்தோ பாா்மா’ நிறுவனத்தின் இயக்குநரான ஷரத் ரெட்டி, கலால் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த நவம்பா்,2022-இல் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா். பின்னா், ஜாமீனில் வெளிவந்த அவா் தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பல கோடி ரூபாய் கொடுத்துள்ளாா். கலால் கொள்கை ஊழல் தொடா்பாக நடைபெற்ற பணமோசடி பாஜகவின் கருவூலத்திற்கு தான் சென்றுள்ளது. எனவே, பாஜகவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு அமலாக்க இயக்குநரகத்திற்கு நான் சவால் விடுக்கிறேன். பாஜக தனது வங்கிக் கணக்குகளில் ‘குற்ற வருமானம்’ பெற்ற காரணத்திற்காக அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி நட்டாவை அமலாக்க இயக்குநரகம் கைது செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் அதிஷி.