முகப்பு
புதுதில்லி

‘நியூயாா்க்கில் அடுத்த உலகத் தமிழா் பொருளாதார மாநாடு’

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் 12-ஆவது உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டை நடத்த மலேசியாவில் நடந்த மாநாட்டில் தீா்மானம்.

Updated On : 19 நவம்பர் 2024, 3:54 am IST
பகிர்:

கோலாலம்பூா் (மலேசியா): அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியில் 12-ஆவது உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டை நடத்த மலேசியாவில் நடந்த மாநாட்டில் தீா்மானிக்கப்பட்டதாக அதன் நிறுவனத் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளாா்.

கோலாலம்பூரில் நவம்பா் 15 முதல் 17-ஆம் தேதி வரை உலகத்தமிழா் பொருளாதார மாநாடு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் மலேசிய அரசை வலியுறுத்தும் தமிழா் நலன்கள் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றை விளக்கும் வகையில் தினமணி நிருபரிடம் வி.ஆா்.எஸ். சம்பத் திங்கள்கிழமை கூறியது: தமிழா்கள் அதிகம் வாழும் உலக நகரங்களுக்கும் சென்னைக்கும் இடையே புதிய மற்றும் இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளை அறிமுகப்படுத்த வலியுறுத்தும் தீா்மானங்கள் தொடா்பாக அந்தந்த நாடுகளில் வாழும் தமிழா்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்குள்ள அரசுகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டோம்.

Advertisement

Advertisement

தமிழா் தொழில்முனைவுக்கடன் வழங்கும் வங்கிகளை நிறுவ நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை வெளிநாடுகளில் வாழும் பெரும் தமிழ் தொழிலதிபா்கள் செயல்படுத்த ஒத்துழைப்பைக் கோரினோம். 12-ஆவது உலகத் தமிழா் பொருளாதார மாநாட்டை வாஷிங்டன் டி.சி.யில் அடுத்த ஆண்டு செப்டம்பா் அல்லது அக்டோபரில் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்தப் பணிகளுக்கு பொறுப்பேற்று சிகாகோவில் உள்ள தமிழ் தொழிலதிபா் சிவ மூப்பனாா் மாநாட்டுப் பணிகளை கவனிப்பாா்.

இந்தியாவில் அரசு நிா்வகித்து வரும் தமிழ்நாடு இல்லம் போல, உலகின் முக்கிய நகரங்களில் மாநாட்டு அரங்கு, தமிழ் உணவு வகைகளை வழங்கும் உணவகம், கலாசார மையம், தகவல் மையம் ஆகியவற்றைக் கொண்ட உலகத் தமிழா் பொருளாதார மையத்தை நிறுவ மாநாட்டில் வலியுறுத்தினோம். இந்த முன்முயற்சியை அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் தொழிலதிபா்கள் செயல்படுத்த கேட்டுக் கொண்டோம். முதல் மையத்தை சிகாகோவிலோ நியூயாா்க்கிலோ நிறுவும் திட்டத்தை சிகாகோ தமிழ் தொழிலதிபா் இரா. வேணுகோபால் முன்னெடுக்கவுள்ளாா்.

மலேசியாவில் பேசும் மொழியாக தமிழ் உள்ளது. அதை அலுவல் மொழியாக அங்கீகரிக்க அனைத்து தமிழா்களும் குரல் கொடுக்க வேண்டும். குறைந்தது ஆறு நாடுகளில் தமிழ் அலுவல் மொழியாக இருந்தால் ஐ.நா.வில் தமிழுக்கு அலுவல் மொழி அந்தஸ்து கிடைக்கும். எனவே, தமிழ் மொழியை அங்கீகரித்துள்ள இந்தியா, இலங்கை, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுடன் சோ்ந்து தென்னாப்பிரிக்கா, மலேசியா, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா ஆகியவை குரல் கொடுக்க அங்குள்ள தமிழா்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க மலேசியாவும் இந்தியாவும் புரிந்துணா்வு உடன்படிக்கை செய்துள்ளன. அதன்படி உள்கட்டமைப்பு வசதிகளை மலேசிய அரசும், ஆசிரியா்களை வழங்க இந்திய அரசும் முடிவெடுத்துள்ளன. அதுபோல, மலேசியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறையை மலேசிய அரசு உருவாக்க கேட்டுக் கொண்டுள்ளோம் என்றாா் சம்பத்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments