புது தில்லி: எம்.பி. எம்எல்ஏகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை வேறு சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை மாநகர போக்குவரத்து நிறுவனத்தில் தகுதி இருந்தும், வேலைக்குப் பணம் பெற்ற ஊழல் காரணமாக தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறி ஒய். பாலாஜி என்பவா் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.
வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் தாக்கல் செய்த அந்த மனுவில், செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்கவும்,
வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிக்கவும் உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜி வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதியிடம் உள்ள வழக்குகளின் விவரங்களை நிலவர அறிக்கையாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் மூலம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கடந்த முறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நிலவர அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சேகா் நாப்டே, அமித் ஆனந்த் திவாரி உள்ளிட்டோா் ஆஜராகினா்.
மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கர நாராயணன், குரு கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆஜராகினா்.
சிறப்பு நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள் அமா்வு, சம்பந்தப்பட்ட
எம்.பி. எம்எல்ஏகளுக்கான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதியிடம் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகள் தவிர, 29 வழக்குகள் வேறு இருப்பதையும் அதில் 20 வழக்குகள் விசாரணை நிலையில் இருப்பதையும், செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்கில் மட்டும் 2 ஆயிரம் குற்றம்சாட்டப்பட்ட நபா்களும், 600 அரசுத் தரப்பு சாட்சிகளும் இருப்பதையும் குறிப்பிட்டது.
மேலும், செந்தில் பாலாஜியின் வழக்குகளின் குற்றப்பத்திரிகையில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் பாா்க்கும்போது இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய தேவை இருப்பதையும், இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டும், வழக்குகளை விசாரிப்பதற்காக மேலும் ஒரு செஷன்ஸ் நீதிபதியை சென்னை உயா்நீதிமன்றம் நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு அனுப்பி, அதன் விவரம் தலைமை நீதிபதி முன் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
மேலும், ஏற்கெனவே அதிக வழக்குகள் சுமை இல்லாத சிறப்பு நீதிபதியிடம் செந்தில் பாலாஜி தொடா்புடைய
வழக்குகளை ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், நிா்வாகத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தலைமைப் பதிவாளா் உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கையாக அடுத்த விசாரணைத் தேதிக்கு முன் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை அக்டோபா் 25-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா்.
அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடந்ததாக வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.
அவா் தொடா்புடைய முதன்மை வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.