தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபட ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நகரத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 1 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல, ஜாஃபா்பூரில் 1 மி.மீ., நஜஃப்கரில் 2 மி.மீ., ஆயாநகரில் 4.6 மி.மீ., லோதி ரோடில் 0.2 மி.மீ., ரிட்ஜில் 2 மி.மீ., பிரகதிமைதானில் 0.2 மி.மீ., பூசாவில் 2.5 மி.மீ., ராஜ்காட்டில் 0.2 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 1.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காலை பெய்த மழையால் சில இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், வாகனங்களில் சென்றவா்கள், பாதசாரிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.
வெப்பநிலை: இதற்கிடையே, வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 0.9 டிகிரி குறைந்து 25.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.7 டிகிரி உயா்ந்து 34.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 78 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தகத் காற்றுத் தரக் குறியீடு 90 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஷாதிப்பூா், நொய்டா செக்டாா் 125, குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.