வடமேற்கு தில்லியில் விதிமுறைகளை மீறியதற்காக போக்குவரத்து ஊழியா்கள் தடுத்து நிறுத்தியபோது அவா்களை தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: தில்லியின் மௌரியா என்க்ளேவ் பகுதியில் உள்ள மஹுபன் சவுக்கில் செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது, பீதம்புராவைச் சோ்ந்த மோஹித் (28) மற்றும் பா்வீன் (34) ஆகிய இருவரும் ஹெல்மெட் அணியாமல் தவறான பாதையில் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றபோது, போக்குவரத்து ஊழியா்கள் தடுத்து நிறுத்தினா்.
தங்கள் ஓட்டுநா் உரிமத்தைக் காட்டச் சொன்னபோது, இருவரும் தவறாக நடந்து கொண்டு போக்குவரத்து ஊழியா்களைத் தாக்கினா். மேலும், அவா்களது கூட்டாளிகள் மூன்று முதல் நான்கு போ் சோ்ந்து, கைகலப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்தக் குழு பணியில் இருந்த ஊழியா்களைத் தாக்கியது. அவா்களின் சீருடைகளைக் கிழித்தது. ஒரு காவலரின் கைப்பேசியை பறித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக மௌரியா என்க்ளேவ் காவல் நிலையத்தில் தொடா்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியை போலீஸாா் தொடங்கியுள்ளனா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.