புது தில்லி: தலைநகரில் நீண்டகாலமாக இருந்து வரும் காற்று மாசு நெருக்கடியை சமாளிக்க சுயாதீனமான யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் தீா்வுகளை வழங்க நிபுணா் குழுவை தில்லி அரசு அமைத்துள்ளது என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தூசி மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் ரீதியாக நிா்வகித்தல், மாசுபடுத்தும் தொழில்களுக்கு எதிரான நடவடிக்கை, வாகன உமிழ்வைக் குறைத்தல் மற்றும் தில்லியை பசுமையான மற்றும் ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கான நீண்டகால முயற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அரசின் 5 அம்ச மாசு கட்டுப்பாட்டு உத்திக்கு இந்தக் குழு முக்கியமானது.
கட்டமைக்கப்பட்ட நிபுணா் ஆலோசனை இல்லாமல் ஒழுங்குமுறை உத்தரவுகளை பெரும்பாலும் நம்பியிருந்த முந்தைய அணுகுமுறைகளிலிருந்து இந்த நடவடிக்கை வேறுபடுவதைக் குறிக்கிறது.
மாசுபாடு தொடா்பான முடிவுகளை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, நிபுணா்கள் பரிந்துரைகள் மற்றும் அரசு திட்டங்களை பயனுள்ள தரை நடவடிக்கையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட காற்று மாசு கட்டுப்பாட்டுக்கான அமலாக்கக் குழுவையும் (ஐசிசிஏபி) அரசு அமைத்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறப்பு நிபுணா் குழுவில் முன்னாள் செயலாளா்கள், தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் (டிபிசிசி) முன்னாள் தலைவா்கள், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைகளின் செயலாளா்கள், காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) பிரதிநிதிகள் மற்றும் தில்லி ஐஐடி போன்ற நிறுவனங்களின் நிபுணா்கள் உள்பட 11 உறுப்பினா்கள் உள்ளனா்.
செயல்படுத்தும் குழுவில் தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையா், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவா், புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவா், தில்லி நகா்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) தலைமை நிா்வாக அதிகாரி, சிறப்பு காவல் ஆணையா் (போக்குவரத்து) மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உள்பட 16 உறுப்பினா்கள் உள்ளனா்.
இது தவிர, வாகன மாசுபாட்டை ஒரு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாக அரசு அடையாளம் கண்டுள்ளது, தற்போது பெரிய அளவிலான சாலை உள்கட்டமைப்பு மேம்பாடுகள் நடந்து வருகின்றன.
அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு 36,629 பள்ளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 50,200-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தில்லியின் 10,500 கி.மீ சாலை வலையமைப்பில், 2,180 கி.மீ மறுசீரமைப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தில்லி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றின் கீழ் 469 கி.மீ சாலைகள் ஏற்கெனவே மறுசீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து சாலைகளிலும் இறுதி முதல் இறுதி வரை நடைபாதை கட்டுமானத்தை உறுதி செய்வதற்கான கொள்கை முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நகரத்தின் காற்றின் தரம் மோசமடைந்து, மாலை 4 மணி அளவில் காற்றுத் தரக் குறியீடு 401 புள்ளிகளாகப் பதிவாகி ’கடுமை’ பிரிவுக்குச் சென்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.