புது தில்லி: தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் டம்பா் லாரி மோதி 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
சங்கம் விஹாரில் உள்ள தவான் பண்ணை அருகே சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காய்கறி வியாபாரியான பாதிக்கப்பட்டவா் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
சாலையைக் கடக்கும்போது, டம்பா் லாரி அவா் மீது மோதியதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சிறுவனின் தலை லாரியின் பின்புற சக்கரத்தின் கீழ் சிக்கி நசுங்கியது. வாகனத்தை விட்டுவிட்டு ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டாா் என்று அதிகாரி கூறினாா்.
விபத்து குறித்து காலை 11 மணியளவில் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, சிறுவன் ஏற்கெனவே மஜீடியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
இந்த விபத்து தொடா்பாக சங்கம் விஹாா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவுகள் 281 (அதிகப்படியாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான ஓட்டுநரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தாா்.