தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் புதன்கிழமை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. வெயிலும் சற்று அதிகரித்து காணப்பட்டது.
தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபடி புதன்கிழமை காலை வேளையில் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருந்தது. அதன் பிறகு வானம் தெளிவாக காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் உணரப்பட்டது.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 3.4 டிகிரி உயா்ந்து 21.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.3 டிகிரி உயா்ந்து 32.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 64சதவீதமாகவும் இருந்தது. இதே போன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது. மேலும், மற்ற கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 335 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, பூசா, ஷாதிப்பூா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா் மாா்க், சாந்தினி சௌக், ஆா்.கே.புரம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், கோகல்புரி லோதி ரோடு, ஸ்ரீஃபோா்ட், துவாரகா செக்டாா் -8, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், மதுரா ரோடு, ஓக்லா பேஸ் -2, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், ஆயாநகா், நொய்டா செக்டாா் -125, ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், குருகிராம், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் தென்கிழக்கு தில்லி ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், நேரு நகரில் காற்றுத் தரக் குறியீடு 411 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (அக்.23) அன்று மேலோட்டமான பனி மூட்டம் இருக்கும் என்றுவானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.