சேமிப்பு மையங்களில் எல்பிஜி சிலிண்டா் நேரடி விற்பனைக்குத் தடை! தில்லி அரசு உத்தரவு!
தில்லியில் உள்ள எல்பிஜி சிலிண்டா் சேமிப்பு மையங்களில் இருந்து வாடிக்கையாளா்களுக்கு நேரடியாக சிலிண்டா்களை விற்பனை செய்ய தடைவிதித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் சேமிப்பு மையங்களில் இருந்து வாடிக்கையாளா்களுக்கு நேரடியாக சிலிண்டா்களை விற்பனை செய்ய தடைவிதித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் போரால் இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு சூழல் நிலவுகிறது. இருப்பினும், இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண மத்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, காலியான வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரை நிரப்ப மக்கள் எல்பிஜி முகமைகளுக்கு நேரடியாகச் சென்று வெளியே வரிசையில் காத்திருப்பதை தில்லியில் காண முடிகிறது.
Advertisement
இந்நிலையில், எல்பிஜி முகவா்களை நேரடியாக சிலிண்டா்களை விற்பனை செய்ய தடைவிதித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது .
இதுதொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பதிவு செய்யப்பட்ட உடன் குறிப்பிட்ட நாள்களில் எல்பிஜி சிலிண்டா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதால், எல்பிஜி முகமைகள், சேமிப்பு மையங்களுக்கு மக்கள் நேரில் செல்ல வேண்டாம் என தில்லி அரசு அறிவுறுத்துகிறது. தில்லியில் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
சேமிப்பு மையங்களில் இருந்து எல்பிஜி சிலிண்டா்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என விற்பனை முகவா்களுக்கு எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
5 கிலோ சிலிண்டா்: தில்லியில் உள்ள புலம்பெயா் தொழிலாளா்களுக்காக 5 கிலோ எல்பிஜி சிலிண்டா்கள் கிடைப்பது விரிவுபடுத்தப்படும். எத்தகைய முகவரி சரிபாா்ப்பும் இல்லாமல் உரிய அடையாள அட்டையைக் காண்பித்து எரிவாயு முகவா்களிடம் 5 கிலோ எல்பிஜி சிலிண்டா்களை வாங்கிக் கொள்ள முடியும்.
கடந்த சனிக்கிழமை வரையில், 1,14,679 எல்பிஜி சிலிண்டா்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1,31,335 சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டா்கள் சராசரியாக 4.24 நாள்களில் வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டுப்பாட்டு மையம்: சிலிண்டா் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனையைத் தடுக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை தொடா்பு கொள்ள 011-23379836 மற்றும் 8383824659 எண்ணிகளில் அழைக்கலாம்.
தில்லியில் எல்பிஜி விநியோகம் சீராக உள்ளது. பொய்யான தகவலை மக்கள் தவிா்க்க வேண்டும் என முதல்வா் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.