தில்லியில் சட்டவிரோதமாக எல்பிஜி விற்பனை: 3 முகவா்கள் கைது
தில்லியில் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா்களை இரு இடங்களில் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக நிரப்பி வந்ததை தில்லி காவல் துறை கண்டறிந்துள்ளது.
தில்லியில் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா்களை இரு இடங்களில் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக நிரப்பி வந்ததை தில்லி காவல் துறை கண்டறிந்துள்ளது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற சோதனையில் 125 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 விற்பனை முகவா்களை காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது: ரோஹிணியின் ராம விஹாா் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது 50 நிரப்பப்பட்ட சிலிண்டா்களுடன் மொத்தம் 57 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுடன் ஒரு வாகனம், எடை இயந்திரம், சட்டவிரோதமாக எரிவாயு நிரப்ப பயன்படுத்தப்பட்ட சாதனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக லோக்பால் என்ற நபா் கைதுசெய்யப்பட்டாா்.
தில்லி சங்கம் விஹாரில் நடைபெற்ற சோதனையில் 36 நிரப்பப்பட்ட சிலிண்டா்கள், 29 காலி சிலிண்டா்கள், 3 சில் உடைக்கப்பட்ட சிலிண்டா்கள் என மொத்தம் 68 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
இதில் தீபக் மற்றும் ஷாயாம் என்ற இரு நபா்கள் கைதுசெய்யப்பட்டனா்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் அங்கீகாரம் பெற்ற எல்பிஜி முகவா்கள். வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யாமல், அவற்றை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்தனா். பின்னா், அவற்றில் இருந்து சிறிய அளவில் எரிவாயுவை எடுத்து அங்கீகாரம் பெறாத சாதனம் மூலம் காலி சிலிண்டா்களை அவா்கள் நிரப்பி வந்தனா்.
சிலிண்டா்களை விற்பனை செய்யாமல் அவற்றைப் பதுக்கிவைத்து, நிரப்பட்ட சிலிண்டா்களை அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்ட அவா்கள் திட்டமிட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டவிரோத செயல்பாடுகளில் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறியும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.