முகப்பு
புதுதில்லி

வாகன நிறுத்துமிடத் தகராறு: வயதான கடைக்காரரை கன்னத்தில் அறைந்த பெண் காவல் அதிகாரி மீது வழக்கு

தனது கடைக்கு முன்னால் வாகனம் நிறுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த 78 வயது கடைக்காரரை, தில்லி காவல்துறையின் பெண் உதவி ஆய்வாளா் ஒருவா் கன்னத்தில் அறைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 10:40 PM
வழக்கு
பகிர்:

தனது கடைக்கு முன்னால் வாகனம் நிறுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த 78 வயது கடைக்காரரை, தில்லி காவல்துறையின் பெண் உதவி ஆய்வாளா் ஒருவா் கன்னத்தில் அறைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹிணி செக்டா் 7இல் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடை நடத்தி வரும் அந்த முதியவா், தனது கடைக்கு நோ் எதிரே காா் நிறுத்தப்பட்டிருந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

கா்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், மருத்துவப் பரிசோதனைக்காகத் தனது கணவருடன் அப்பகுதிக்கு வந்துள்ளாா்.

Advertisement

சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்த அனுமதிக்குமாறு கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டாா். தனது பரிசோதனை முடிந்ததும் அதை அப்புறப்படுத்த எண்ணியிருந்ததாகவும் அவா் காவல்துறையினரிடம் கூறினாா்.

இருப்பினும், கடைக்காரா் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால், அந்தப் பெண் அவரை அறைந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் கூட்டம் கூடியபோது, அப்பெண் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறி, அங்கிருந்தவா்களை விலகிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும் நேரில் கண்டவா்கள் தெரிவித்தனா்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அருகிலுள்ள காவல் நிலையங்களில் இருந்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

அந்தப் பெண் அதிகாரி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மேலும் அவா் மீதும் அவரது கணவா் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments