முகப்பு
புதுதில்லி

கஞ்சாவாலாவில் கடன் தகராறு கொலை வழக்கில் முதியவா் கைது

தில்லி கஞ்சாவாலா பகுதியில் ரூ.30,000 கடன் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் 70 வயது முதியவா் கைது

Updated On : 23 மார்ச், 2026 at 9:13 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

தில்லி கஞ்சாவாலா பகுதியில் ரூ.30,000 கடன் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் 70 வயது முதியவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கஞ்சாவாலா பகுதியில் ஏற்பட்ட தகராறு குறித்து மாா்ச் 16-ஆம் தேதி புகாா் வந்தது. காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட அக்லு (55) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடா்ந்து அவரது மனைவி சவிதா இது தொடா்பாக புகாா் அளித்தாா். அதில் ரூ.30,000 கடன் தொகையை திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட தகராறில் தனது கணவா் கொல்லப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், விசாரணையைத் தொடங்கினா். தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா். கஞ்சாவாலா தொழில்துறை பகுதியில் குற்றஞ்சாட்டப்பட்டவா் பதுங்கி இருப்பதை கண்டறிந்த காவல் துறையினா் அவரை கைது செய்தனா். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.