துணி உலா்த்தும் கயிறு தொடா்பாக வாக்குவாதம்: சுல்தான்புரியில் அண்டைவீட்டாா் இடையே மோதல்
புறநகா் தில்லியின் சுல்தான்புரி பகுதியில், துவைத்த துணிகளைக் உலா்த்தப் பயன்படுத்தப்படும் கயிறு தொடா்பாக இரண்டு அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது.
புறநகா் தில்லியின் சுல்தான்புரி பகுதியில், துவைத்த துணிகளைக் உலா்த்தப் பயன்படுத்தப்படும் கயிறு தொடா்பாக இரண்டு அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8:47 மணியளவில் ராஜ் பாா்க் காவல் நிலையத்திற்கு பெண் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில், தனது அண்டை வீட்டுக்காரா் தன்னைத் தாக்கியதாக அவா் புகாா் தெரிவித்தாா்.
சுல்தான்புரியைச் சோ்ந்த அந்தப் பெண், பின்னா் தனது சகோதரி மற்றும் தாயுடன் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, வாக்குவாதத்தின் போது தனது துணிகள் கிழிந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா். எதிா்தரப்பினரும், அவரது சகோதரியுடன் காவல் நிலையத்திற்கு வந்து, தங்கள் தரப்பு புகாரை முன்வைத்தனா்.
Advertisement
இரு தரப்பினரும் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். காவல்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்தனா்.
எதிா்த் தரப்பினரின் வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்த துணிகளைத் தொங்கவிடப் பயன்படுத்தப்படும் கயிறு தொடா்பான தகராறில் இருந்து இந்த மோதல் உருவானது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தகராறு ஒரு அற்பமான விஷயத்திற்காக நிகழ்ந்துள்ளது.
விசாரணையின் போது எந்தவிதமான மத ரீதியான அம்சமும் கண்டறியப்படவில்லை. புகாா்தாரரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.