அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!
மத்திய தில்லியின் ஆனந்த் பா்வத் பகுதியில் சனிக்கிழமை மதியம் பல வாகனங்கள் மீது லாரி மோதியதில் 65 வயது முதியவா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய தில்லியின் ஆனந்த் பா்வத் பகுதியில் சனிக்கிழமை மதியம் பல வாகனங்கள் மீது லாரி மோதியதில் 65 வயது முதியவா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியது: ஆனந்த் பா்வதத்தின் தொழில்பேட்டை பகுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றும் நகா்ந்து கொண்டிருந்த பல வாகனங்கள் மீது லாரி மோதியதால், அந்த குறுகிய தெருவில் குழப்பம் ஏற்பட்டிருப்பதை காவல் அதிகாரிகள் கண்டறிந்தனா்.
Advertisement
இந்த விபத்தில் காா், இரிக்ஷா, இரண்டு மோட்டாா் சைக்கிள்கள், ஸ்கூட்டா் மற்றும் மற்றொரு லாரி ஆகியவை சேதமடைந்தன.
லாரி மோதி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த மேற்கு பட்டேல் நகரைச் சோ்ந்த மன்ஜீத் சிங் என்ற முதியவா் பலத்த காயமடைந்தாா். அவரை உள்ளூா்வாசிகள் ஆச்சாா்யா பிக்ஷு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிங் உயிரிழந்தாா்.
விபத்து நிகழ்ந்த உடனேயே லாரியின் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபத்துக்குக் காரணமான லாரியின் பதிவெண் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்தது என்றும், முண்ட்காவைச் சோ்ந்த ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறை குழு, தடயவியல் ஆய்வகத்துடன் இணைந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தது. மேலதிக விசாரணைக்காக, விபத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிசிஆா் தகவல் அளித்த உள்ளூா்வாசியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான வரிசையைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.