துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
துவாரகா விரைவுச்சாலையில் ஒருவரிடம் இருந்து ரூ.15 லட்சம் கொள்ளையடித்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
துவாரகா விரைவுச்சாலையில் ஒருவரிடம் இருந்து ரூ.15 லட்சம் கொள்ளையடித்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.11.96 லட்சத்தை காவல் துறையினா் மீட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல் துறையின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: துவாரகா விரைவுச்சாலையில், செக்டா் 22-இல் உள்ள தில்லி அபாா்ட்மெண்ட்ஸ் அருகே நடந்த இந்தச் சம்பவம் குறித்து ஏப்ரல் 6 அன்று காவல் துறையினருக்கு தகவல் வந்தது.இது தொடா்பாக ஏப்ரல் 9 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கைப்பேசி இருப்பிடங்களைக் கண்காணித்தனா்.
சந்தேக நபா்களை அடையாளம் காண உள்ளூா் தகவல் அளிப்பவா்களுடன் காவல் துறையினா் இணைந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதையடுத்து, முதல் குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் (29) கைது செய்யப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரது கூட்டாளி சந்தோஷ் மேத்தோ (29) நாங்லோயில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டாா்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் குற்றச்செயல் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்ட ஒரு கைப்பேசி ஆகியவை மீட்கப்பட்டன.
மேலும், மூன்றாவது குற்றஞ்சாட்டப்பட்ட சூரஜ் சோன்கா் (23), சதா் பஜாா் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.
அவரிடமிருந்து ரூ.1.96 லட்சத்தை காவல்துறையினா் மீட்டனா். குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் அடையாளம் கண்டனா்.
மொத்தமாக, கொள்ளையடிக்கப்பட்ட தொகையில் ரூ.11.96 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு இது போன்ற வேறு வழக்குகளில் தொடா்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.