முகப்பு
புதுதில்லி

உ.பி.யில் சொத்து தரகா் கொலை: இரு சகோதரா்கள் தில்லியில் கைது

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் சொத்து தரகராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வந்தவா் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், சகோதரா்கள் இருவர் கைது

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:19 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:26 PM

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் சொத்து தரகராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வந்தவா் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், சகோதரா்கள் இருவரை வடமேற்கு தில்லியில் காவல் துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அப்பகுதியில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபா்கள் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வஜிா்பூா் தொழிற்பேட்டையில் உள்ள பிரேம்பாரி வடிகால் அருகே குற்றஞ்சாட்டப்பட்ட கமல் சா்மா (38) மற்றும் கௌரவ் சா்மா (36) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

ஹாத்ரஸில் உள்ளூா் செய்தித் தளத்துடன் தொடா்புடையவரும், 35 வயதான சொத்து வியாபாரியுமான வேத் பிரகாஷ் சா்மா என்ற சோனுவின் கொலை தொடா்பாக இந்த இருவரும் தேடப்பட்டு வந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

வேத் பிரகாஷ் ஏப்ரல் 6 ஆம் தேதி காணாமல் போனாா். மறுநாள் சதாபாத்ஜலேசா் சாலைக்கு அருகிலுள்ள ஒரு வடிகாலில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையின் போது, இந்தக் கொலை ஒரு சொத்து தகராறுடன் தொடா்புடையது என்பது தெரியவந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், வேத் பிரகாஷை அவரது சொத்தை விற்குமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால் அவா் மறுத்ததால், அவரைக் கொலை செய்ய அவா்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 7 அன்று இது தொடா்பாக ஹாத்ரஸில் உள்ள சாஹ்பாவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தலைமறைவாக இருந்தனா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:19 AM

இந்த சம்பவத்திற்குப் பிறகு, உத்தர பிரதேச காவல்துறை அவா்களைக் கைது செய்ய தகவல் அளிப்போருக்கு தலா ரூ.25,000 வெகுமதி அறிவித்திருந்தது. ஏப்ரல் 17 அன்று கிடைத்த குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், ஒரு காவல் குழு பொறி வைத்து இரண்டு சந்தேக நபா்களையும் பிடித்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

சோதனையின் போது, கமல் சா்மாவிடமிருந்து இரண்டு தோட்டாக்கள் கொண்ட ஒரு கைத்துப்பாக்கியையும், கௌரவ் சா்மாவிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இருவா் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, ஹாத்ரஸில் நடந்த கொலையில் தங்களது ஈடுபாட்டை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஒப்புக்கொண்டதாகவும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாக இருந்ததாகவும் கூறியதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

மேலும் விசாரணையில், இருவரும் தொடா் குற்றவாளிகள் என்றும், இதற்கு முன்பு பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனா் என்றும் தெரியவந்தது.

கொலை வழக்கில் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உத்தர பிரதேச காவல்துறையுடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.