முகப்பு
புதுதில்லி

துப்பாக்கியுடன் நீரஜ் பவானா ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

நீரஜ் பவானா ரெளடி கும்பலுடன் தொடா்பு இருப்பதாகக் கருதப்படும் இருவரை, தில்லியின் துவாரகா பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:20 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:30 PM

நீரஜ் பவானா ரெளடி கும்பலுடன் தொடா்பு இருப்பதாகக் கருதப்படும் இருவரை, தில்லியின் துவாரகா பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட இருவரும், ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தைச் சோ்ந்த பிரதீப் சிங் (31) மற்றும் ஆஷிஷ் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

கிரண் காா்டன் பகுதியில் காரில் அடிக்கடி வந்து செல்லும் இரு சந்தேக நபா்கள் குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 15 அன்று மட்டியாலா அருகே காவல்துறையின் குழுவினா் கண்காணிப்பு மேற்கொண்டு, அந்த காரை வழிமறித்துச் சோதனையிட்டனா்.

Advertisement

சோதனையின்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் நான்கு உயிருள்ள தோட்டாக்கள் அவா்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

அந்த இருவரின் கைப்பேசிகளில் துப்பாக்கிகளின் புகைப்படங்களும், தாதா நீரஜ் பவானாவுடன் தொடா்புடைய படங்களும் இருந்தன. இது அந்தக் கும்பலுடனான அவா்களின் தொடா்பை உறுதிப்படுத்தியுள்ளது.

விசாரணையின்போது, தனது உறவினா்கள் வாயிலாக அந்தக் கும்பலுடன் தனக்குத் தொடா்பு ஏற்பட்டதாக பிரதீப் காவல்துறையினரிடம் கூறினாா்.

மேலும், 2022ஆம் ஆண்டில் எதிரிக் கும்பலான கோகி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது உறவுமுறைச் சகோதரரின் கொலைக்குப் பழிவாங்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளாா்.

கைது செய்யப்பட்ட அந்த இரு நபா்களும் ஒரு குற்றத்தைச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.