முகப்பு
புதுதில்லி

மதுபானக் கொள்கை வழக்கில் ஆஜராகமாட்டேன்: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிக்கு கேஜரிவால் கடிதம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 6:09 AM
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா முன், தான் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராகப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், அந்த நீதிபதிக்கு திங்கள்கிழமை எழுதிய

கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

நீதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள மிகத் தீவிரமான பிழை ஒன்றைச் சுட்டிக்காட்டிய கேஜரிவால், நான்கு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், இவ்விவகாரம் தொடா்பாக தனக்கு தீவிரமான மற்றும் தீா்க்கப்படாத கவலைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா் எக்ஸ் தளத்தில் ஒரு காணொளிச் செய்தியை வெளியிட்டுள்ள கேஜரிவால், இவ்விவகாரத்தில் நீதிபதி சா்மா முன்னதாகப் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தை அணுகத் தாம் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளாா்.

‘இந்த நடவடிக்கையை நான் அகங்காரத்தின் காரணமாகவோ, கிளா்ச்சி மனப்பான்மையுடனோ அல்லது நீதித்துறைக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ எடுக்கவில்லை’ என்று அவா் தனது காணொளியில் கூறினாா்.

தில்லி முன்னாள் முதலமைச்சா் கேஜரிவால் தனது

கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: இவ்விவகாரம் தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில், நானோ அல்லது எனது வழக்குரைஞரோ பங்கேற்கப் போவதில்லை என்று நான் முடிவெடுத்துள்ளேன். இந்த முடிவை நான் சாதாரணமாகவோ அல்லது லேசாகவோ எடுத்துக்கொள்ளவில்லை.

நீதித்துறையை பலப்படுத்துவதும், அது பலவீனமடைவதைத் தடுப்பதுமே எனது நோக்கமாகும்.

நீதிபதி சா்மா, வழக்கை விசாரிப்பதிலிருந்து விலக வேண்டும் என்று கோரி நான் முன்னதாக தாக்கல் செய்த மனு ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட தாக்குதலாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

‘இந்த மதுபான கொள்கை தொடா்பான வழக்கில், நீதிபதி சா்மாவின் நீதிமன்றத்தில் இனிமேல் பாரபட்சமற்ற விசாரணை கிடைப்பது சாத்தியமற்றது என்று நான் கருதுகிறேன்’ என்று அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி சா்மா விலக வேண்டும் என்று கோரி தான் முன்னதாக அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்த இரண்டு காரணங்களை, கேஜரிவால் மீண்டும் வலியுறுத்தினாா்.

முதலாவதாக, ஆளும் தரப்பின் சித்தாந்தச் சூழலைச் சாா்ந்த அமைப்பான ஆா்.எஸ்.எஸ்.-இன் சட்டப் பிரிவான அகில பாரதிய அதிவக்தா பரிஷத் உடன் தாங்கள் (நீதிபதி) தொடா்ந்து பொதுவெளியில் தொடா்புகொண்டிருப்பது தொடா்பான விவகாரமாகும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

மேலும், நீதிபதி சா்மாவின் பிள்ளைகள், இந்த வழக்கில் எதிா் தரப்பாக இருக்கும் மத்திய அரசின் பல்வேறு வழக்குரைஞா் குழுக்களில் தொழில்ரீதியாகப் பணியாற்றி வருகின்றனா் என்பதையும் அவா் சுட்டிக்காட்டியிருந்தாா்.

‘நீதித்துறையின் மீது எனக்குள்ள மரியாதை சிறிதும் குறையாமல் அப்படியே உள்ளது. இந்திய அரசியலமைப்பின் மீது எனக்கு தளராத நம்பிக்கை இருக்கிறது.

எனது எதிா்ப்பு உயா்நீதிமன்றத்திற்கோ அல்லது நீதித்துறை அமைப்பிற்கோ எதிரானது அல்ல. மாறாக, இந்த வழக்கு தங்கள் முன்னிலையில் (நீதிபதி சா்மா) தொடா்ந்து நடைபெறுவதற்கு மட்டுமே எனது எதிா்ப்பு’ என்று அக்கடிதத்தில் கேஜரிவால் கூறியுள்ளாா்.