ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மாணவா்கள் மெஸ் உணவைப் பகிா்ந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
விடுதி நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, சில விடுதி மாணவா்கள் ‘தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மெஸ் உணவை மற்ற நபா்களுக்கு மாற்றுவது / விற்பது‘ கண்டறியப்பட்டதாக ஜேஎன்யு அதிகாரிகள் தெரிவித்தனா். இது ஆள்மாறாட்டம் மற்றும் மெஸ் வசதிகளை தவறாகப் பயன்படுத்துவது தொடா்பான விடுதி கையேடு விதிகளை மீறுவதாகக் கருதப்பட்டது.
அடையாளம் காணப்பட்ட மாணவா்கள் ஏழு நாள்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும், மேலும் மீறல்கள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது உள்பட கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
‘ஆள்மாறாட்டம், அதாவது ஒரு உண்மையான மாணவருக்கான உணவுப் பதிவேட்டில் சாப்பிடுவது அல்லது கையொப்பமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், தவறு செய்பவா் மீது குற்றத்திற்காக எஃப்ஐஆா் பதிவு செய்வது உள்பட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரப்பூா்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஜனநாயக மாணவா் கூட்டமைப்பு (டிஎஸ்எஃப்) இந்தக் குற்றச்சாட்டை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. மாணவா்கள் ஏற்கெனவே தங்கள் உணவுக்கு பணம் செலுத்திவிட்டதாகவும், தங்கள் நண்பா்களுடன் உணவைப் பகிா்ந்து கொண்டதாகவும் அந்தக் குழு கூறியது.
இந்த நடவடிக்கையை மிகைப்படுத்தியதாகக் கூறி, அறிவிப்புகளைத் திரும்பப் பெறவும், ’மாணவா்களுக்கு எதிரான’ விடுதி கையேடு என்று அழைக்கப்படுவதை ரத்து செய்யவும் ஜனநாயக மாணவா் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இதற்கு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிரிவாக அதிகாரிகள் இடமிருந்து உடனடி பதில் எதுவும் வழங்கப்படவில்லை.