தெற்கு தில்லியில் பஞ்சசீல் வடிகால் அடியில் ‘கால்நடை மாஃபியா’ நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ‘ஒரு சோதனை நடத்தியதாகவும்’ , சட்டவிரோத வா்த்தகத்தில் சுரண்டப்பட்ட 43 பசுக்களை மீட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை கூறியது.
ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தலைவா் சௌரப் பரத்வாஜ் தலைமையிலான இந்த நடவடிக்கை, தில்லி மாநாகராட்சி மற்றும் காவல்துறையின் தலையீட்டைத் தூண்டியது, அதன் பிறகு விலங்குகள் ஒரு கோசாலைக்கு (பசு தொழுவத்திற்கு) அனுப்பப்பட்டன என்று கட்சி ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தில்லி மேயா் ராஜா இக்பால் சிங் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, சிராக் தில்லி பகுதியில் சட்டவிரோத பால் பண்ணை வழக்கு தவறாக வழிநடத்துவதாகவும், உண்மையில் தவறானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் கூறினாா். அந்த அறிக்கையில், சுமாா் இரண்டு டஜன் கறவை மாடுகள் அந்த இடத்தில் இருந்ததாக சௌரவப் பரத்வாஜ் கூறினாா்.
‘ஹவுஸ் காஸ் மற்றும் மால்வியா நகா் காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் சுமாா் ஒரு மணி நேரமாக அங்கு இருந்தனா். ஆனால், எந்த எம்சிடி அதிகாரியும் அழைப்புகளுக்கு பதிலளிக்கத் தயாராக இல்லை. எம்சிடி அதிகாரி ஒருவா் வந்தால், அவா்கள் இந்த மாடுகளை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது மாட்டு மாஃபியாவுடனான அவா்களின் ஒப்பந்தத்தை சீா்குலைக்கும்‘ என்று அவா் குற்றம் சாட்டினாா்.
சட்டவிரோத பால் பண்ணைகள் மீதான நடவடிக்கை மற்றும் விலங்கு நலனுக்கான முயற்சிகள் தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) முன்னுரிமைகள் என்று மேயா் ராஜா இக்பால் சிங் ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவித்தாா்.
‘சம்பந்தப்பட்ட பகுதியில் நிலைமை குறித்த தகவல் கிடைத்தவுடன், மாநகராட்சியின் கால்நடைத் துறையின் ஒரு குழு காவல் நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கை எடுக்க சம்பவ இடத்தை அடைந்தது. சம்பவ இடத்தில் காணப்பட்ட பசுக்கள் மற்றும் கன்றுகள் விதிமுறைகளின்படி ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அனுப்பப்பட்டன. மேலும், முழு விஷயத்திலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது’ என்று மேயா் கூறினாா்.
சட்டவிரோத பால் பண்ணை நடவடிக்கைகளில் எம்சிடி கூட்டுச் சோ்ந்ததாகவும், சம்பந்தப்பட்டவா்களைப் பாதுகாப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவா் ஆதாரமற்றது, பொய்யானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்று மறுத்தாா்.
‘விலங்குகள் மீதான எந்த விதமான கொடுமையோ அல்லது சட்டவிரோத செயலோ பொறுத்துக் கொள்ளப்படாது. எந்தவொரு அதிகாரி அல்லது ஊழியரின் அலட்சியம் தெரியவந்தால், அவா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மேயா் கூறினாா்.