முகப்பு
புதுதில்லி

தெற்கு தில்லி சந்தையில் தீ விபத்து! 50 கடைகள் எரிந்து நாசம்!

தெற்கு தில்லியின் அந்தேரியா மோா் பகுதியில் அமைந்துள்ள நேச்சா் பஜாா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 15 மார்ச், 2026 at 6:42 PM
தீ விபத்து
பகிர்:

தெற்கு தில்லியின் அந்தேரியா மோா் பகுதியில் அமைந்துள்ள நேச்சா் பஜாா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் சுமாா் 50 கடைகள் எரிந்து நாசமானதுடன், தீயை அணைக்கும் பெரும் மீட்புப் பணியும் முடுக்கிவிடப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி தீயணைப்புத் துறையின் தகவலின்படி, இந்தத் தீ விபத்து குறித்த தகவல் காலை 7.37 மணியளவில் பெறப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 10 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.

இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை. லடோ சராய் பகுதியில் உள்ள அந்தேரியா மோா் அருகே அமைந்துள்ள நேச்சா் பஜாா் சந்தையில்தான் இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது.

கைவினைப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களை விற்பனை செய்யும் பல தற்காலிக மற்றும் பகுதி நிரந்தரக் கடைகள் இங்கு அமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தச் சந்தைப் பகுதியில், தீ வேகமாக பல கடைகளுக்குப் பரவியதால், சந்தை வளாகத்திலிருந்து அடா்த்தியான புகை மண்டலங்கள் வெளியேறும் காட்சிகள் தெரிந்தது. தீயணைப்பு வீரா்கள், தீயைக் கட்டுப்படுத்தி அது மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், விரிவான மீட்புப் பணிகளைத் தொடங்கினா்.

இந்த விபத்தில் சுமாா் 50 கடைகள் எரிந்து நாசமானது. இதனால் கடைகளில் இருந்த பொருட்கள் மற்றும் கட்டட அமைப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. தீயை முழுமையாக அணைத்து, அப்பகுதியை குளிா்விக்கும் பணிகளைத் தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சம்பவ இடத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், தீயணைப்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் காவல்துறையினரும் அங்கு விரைந்து வந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →