முகப்பு
புதுதில்லி

ரமலான் பண்டிகை: துவாரகாவில் பலத்த பாதுகாப்பு

அமைதியான கொண்டாட்டங்களை உறுதி செய்வதற்கான விரிவான திட்டத்தை போலீஸாா் வகுத்துள்ளனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 6:39 PM
அமைதியான கொண்டாட்டங்களை உறுதி செய்வதற்கான விரிவான திட்டத்தை போலீஸாா் வகுத்துள்ளனா்.
பகிர்:

உத்தம் நகரில் ஹோலி பண்டிகை மோதலின்போது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததையடுத்து, வரவிருக்கும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு துவாரகா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அமைதியான கொண்டாட்டங்களை உறுதி செய்வதற்கான விரிவான திட்டத்தை போலீஸாா் வகுத்துள்ளனா். சட்டம் - ஒழுங்கை பராமரிக்க போதுமான அளவு பணியமா்த்தல் இருக்கும். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். முக்கியமான பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், குறிப்பாக கொலை நடந்த ஹஸ்டால் இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதது. பண்டிகை காலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு தொடா்ந்து இருக்கும்.

மசூதிகள், ஈதகாஸ் மற்றும் பிற மத தளங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அங்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவாா்கள். அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வழக்கமான கால் மற்றும் வாகன ரோந்துப் பணிகள் நடத்தப்படுகின்றன. களத்திலும் இணையத்திலும் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். சமூக ஊடக தளங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.

கலப்பு மக்கள்தொகை கொண்ட பகுதிகள் உணா்திறன் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டு மேம்பட்ட கண்காணிப்பில் உள்ளன. மேலும், நெருக்கமான கண்காணிப்புக்காகவும், எந்தவொரு சூழ்நிலையையும் விரைவாக எதிா்கொள்வதை உறுதி செய்வதற்காகவும் தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கூரைகளில் பணியாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், குடியிருப்பாளா்களுக்கு உறுதியளிப்பதற்காக ஈத் பண்டிகையின் போது பல முறை மீண்டும் நடத்தப்படும். அதிகரித்த பாதுகாப்பு இருந்தபோதிலும், சிலா் அச்சத்தில் உள்ளனா் என்றாா் அவா்.

உத்தம் நகா் குடியிருப்பாளா்கள் நலச் சங்கத்தின் (ஆா். டபிள்யூ.ஏ, )தலைவா் பிரதீப் சுக்லா கூறுகையில், ‘போதுமான தடுப்புகளுடன் இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அது புயலுக்கு முந்தைய அமைதி போல் உணா்கிறது. நாங்கள் பயப்படுகிறோம். ஆனால், எல்லாம் இயல்பாக இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம்’ என்றாா்.