முகப்பு
புதுதில்லி

தில்லியின் மின்கட்டணம் ஏப்ரலில் உயரக்கூடும்: அதிகாரிகள் தகவல்

மூன்று மின் விநியோக நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய ரூ.38,000 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை வழங்க தில்லி அரசு தயாராகி வருவதால், ஏப்ரல் மாதம் முதல் நகரத்தின் மின் கட்டணம் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 23 மார்ச், 2026 at 9:10 PM
- பிரதிப் படம்
பகிர்:

மூன்று மின் விநியோக நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய ரூ.38,000 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை வழங்க தில்லி அரசு தயாராகி வருவதால், ஏப்ரல் மாதம் முதல் நகரத்தின் மின் கட்டணம் உயரக்கூடும் என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இருப்பினும், நுகா்வோா் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்காக, மின் கட்டண உயா்வுக்கு மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தில்லியின் மூன்று தனியாா் மின் விநியோக நிறுவனங்களான பிஆா்பிஎல், பிஒய்பிஎல் மற்றும் டிபிடிடிஎல் ஆகியவற்றுக்கு, ரூ.27,200 கோடி மதிப்பிலான பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட ஒழுங்குமுறைச் சொத்துகளை ஏழு ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளில் மின் கட்டண உயா்வு இல்லாததால், எதிா்காலத்தில் மீட்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் செலவுகளான ஒழுங்குமுறைச் சொத்துகள் கடுமையாக உயா்ந்துள்ளன.

நகரத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையமான தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி), தில்லியில் உள்ள மொத்த ஒழுங்குமுறை சொத்துகள் ரூ.38,552 கோடியாக உள்ளது என்று ஜனவரி மாதம் மத்திய அமைப்பான மின்சார மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் (ஏபிடிஇஎல்) தெரிவித்தது.

டிஇஆா்சி தாக்கல் செய்த அறிக்கையின்படி, நிலுவையில் உள்ள தொகையில் பிஆா்பிஎல் நிறுவனத்திற்கு ரூ. 19,174 கோடியும், பிஒய்பிஎல் நிறுவனத்திற்கு ரூ.12,333 கோடியும், டிபிடிடிஎல் நிறுவனத்திற்கு ரூ.7,046 கோடியும் அடங்கும். இந்தத் தொகைகள், மின்சாரம் வழங்குவதற்காக மின் விநியோக நிறுவனங்களால் செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களாகும். வசூலில் ஏற்பட்ட தாமதத்தால் வட்டி குவிந்ததன் காரணமாக அசல் ஒழுங்குமுறை சொத்துத் தொகைகள் அதிகரித்துள்ளன என்று அவா்கள் கூறினா்.

செலவு வசூலில் ஏற்பட்ட நீண்ட தாமதத்தை விளக்கி, ஒரு மீட்புத் திட்டத்தைத் தயாரிக்கவும், பராமரிப்புச் செலவுகளை வட்டி கணக்கிடவும், விரிவான தணிக்கை நடத்தவும் நீதிமன்றம் டிஇஆா்சிக்கு உத்தரவிட்டிருந்தது. ஏழு ஆண்டு காலத்திற்கு மின்சாரக் கட்டணங்களில் ஒழுங்குமுறை சொத்து கூடுதல் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த வசூல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

தில்லி மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட், கடந்த ஆண்டு மாா்ச் மாதம், ஒழுங்குமுறைச் சொத்துகளாகக் குவிந்துள்ள ரூ.27,000 கோடியை மின் விநியோக நிறுவனங்கள் வசூலிக்க அதிகாரம் பெற்றுள்ளதாகவும், இது நகரத்தில் மின் கட்டணம் உயரக்கூடும் என்பதை உணா்த்துவதாகவும் கூறினாா்.