தில்லி கலால் கொள்கை: சம்மன் வழக்குகளில் கேஜரிவால் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து அமலாக்கத்துறை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சம்மன்கள் அனுப்பப்பட்டும், அமலாக்கத்துறையின் முன் ஆஜராகாததற்காக, தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, அமலாக்கத்துறை தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சம்மன்கள் அனுப்பப்பட்டும், அமலாக்கத்துறையின் முன் ஆஜராகாததற்காக, தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, அமலாக்கத்துறை திங்களன்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் ஜனவரி 22 உத்தரவுகளுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீடு, புதன்கிழமை அன்று நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.அப்போதைய முதல்வா் கேஜரிவால், சம்மன்களுக்குப் பதிலளிக்காமலும், விசாரணைக்கு வராமலும் வேண்டுமென்றே தங்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கேஜரிவால் ஆதாரமற்ற ஆட்சேபனைகளை எழுப்பியதாகவும், விசாரணைக்கு வராமல் இருப்பதற்கு வேண்டுமென்றே காரணங்களை உருவாக்கியதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது. தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை கேஜரிவால் வேண்டுமென்றே மீறினாா் என்பதை நிரூபிக்க அமலாக்கத்துறை தவறிவிட்டது என்று விசாரணை நீதிமன்றம் தனது தீா்ப்பில் கூறியுள்ளது.
தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையை வகுப்பதற்காக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவா்கள் கேஜரிவாலுடன் தொடா்பில் இருந்ததாகவும், அதன் விளைவாக அவா்களுக்கு முறையற்ற பலன்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு கையூட்டும் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் ‘கைது செய்வதற்கான தேவை மற்றும் அவசியம்‘ என்ற அம்சம் குறித்த கேள்விகளை, ஆழமான பரிசீலனைக்காக ஒரு பெரிய அமா்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நிலையில், பணமோசடி வழக்கில் கேஜரிவால் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளாா்.
பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐயின் வழக்கு நீதித்துறை ஆய்வில் முழுமையாகத் தாக்குப்பிடிக்கத் தவறிவிட்டது என்றும், அது முழுவதுமாக நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த விடுவிப்புக்கு எதிரான சிபிஐயின் மனு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.